Enter your Email Address to subscribe to our newsletters

திருவள்ளூர், 16 ஜனவரி (ஹி.ச.)
திருவள்ளூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வைத்திய வீரராகவப் பெருமாள் கோவில் 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும்.
இந்த கோவிலில் ஆண்டுக்கு 2 முறை பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி தை பிரம்மோற்சவம் நேற்று (ஜனவரி 15) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் வாகன சேவை நடைபெறும். உற்சவர் ஸ்ரீ வீரராகவர், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக தினமும் வெவ்வேறு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.
அதன்படி முதல் நாளான நேற்று காலை 7 மணிக்கு தங்க சப்பரத்தில் பகவான் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 7 மணிக்கு சிம்ம வாகன சேவை நடைபெற்றது.
இரண்டாம் நாளான இன்று (ஜனவரி 16) காலை 7.30 மணிக்கு ஹம்ச வாகனத்தில் வீரராகவர் எழுந்தருளி, மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இரவு 7 மணிக்கு சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவை (கோபுர தரிசனம்) நாளை (17ம் தேதி) காலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. கருட வாகனத்தில் வீரராகவர் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.
இரவு 8 மணிக்கு அனுமந்த வாகனம் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
21-ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
Hindusthan Samachar / vidya.b