Enter your Email Address to subscribe to our newsletters

புதுக்கோட்டை, 17 ஜனவரி (ஹி.ச.)
தமிழகத்திலேயே அதிகப்படியான வாடிவாசலை கொண்ட மாவட்டம் புதுக்கோட்டை மாவட்டம்.
இந்த மாவட்டத்தில்தான் அதிகப்படியான ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.
அதன் ஒரு பகுதியாக இன்று புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற, நிரந்தர வாடி வாசல் கொண்ட வன்னியன் விடுதியில் ஶ்ரீ மாயன் பெருமாள் கோவில் திடலில் பொங்கல் விழாவை முன்னிட்டு 66 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8:30 மணிக்கு தொடங்கியது.
ஜல்லிக்கட்டு போட்டி தொடங்குவதற்கு முன்னதாக ஜல்லிக்கட்டு உறுதிமொழியை பிற்படுத்தப்பட்டோர் நலந்துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் வாசிக்க வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் அதை ஏற்றுக் கொண்டனர்.
இதனையடுத்து அமைச்சர் மெய்யநாதன் கொடியசைத்து ஜல்லிக்கட்டுப் போட்டியைத் தொடங்பி வைத்தார்.
இந்த ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமின்றி மதுரை, சிவகங்கை, தஞ்சாவூர்,திருவாரூர், திருச்சி, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த 650 காளைகளும் 300 காளையர்களும் பங்கேற்றுள்ளனர்.
இந்த ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு விதிமுறைகளை கடைபிடித்து நடைபெற்று வருகிறது.
இந்த ஜல்லிக்கட்டு போட்டி ஐந்து சுற்றுகளாக நடைபெற உள்ளது.
வாடிவாசலில் இருந்து ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்க்கப்படும் காளைகள் துள்ளி குதித்து சீறிப்பாய்ந்து வருவதை காளையர்கள் மல்லு கட்டி தழுவி வருகின்றனர்.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த முறையில் காளைகளை தழுவிய காளையர்களுக்கும் நீண்ட நேரம் வீரர்களை திணறடித்து களமாடும் காளைகளுக்கும் அமைச்சர் மெய்யநாதன் வழங்கும் இருசக்கர வாகனம், பரிசாக வழங்கப்படுகிறது.
மேலும் LED டிவி,சில்வர் பாத்திரங்கள், ட்ரெஸ்ஸிங் டேபிள், ஃபேன், மிக்ஸி, கிரைண்டர்,வெள்ளி நாணயம், தங்க நாணயம் மற்றும் ரொக்கப் பணம் உள்ளிட்டவைகள் பரிசாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஜல்லிக்கட்டில் ஆலங்குடி காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் 300 -ற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் சுகாதாரத் துறையினர்,
வருவாய்த்துறையினர், கால்நடை பராமரிப்பு துறையினர் உள்ளிட்ட பல்வேறு துறையினரின் கண்காணிப்பில் இந்த ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.
Hindusthan Samachar / Durai.J