பா.ஜ.க. தலைவர்கள் பொறுப்பை தட்டிக்கழிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர் - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
இந்தூர், 17 ஜனவரி (ஹி.ச.) கடந்த மாதம் மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் உள்ள பாகீரத்புரா பகுதியில் பொதுக் கழிப்பறையில் இருந்து வெளியேறிய கழிவுநீர் குடிநீர் குழாய்களில் கலந்ததால் குடிநீர் மாசுபட்டது. இதனால் பலருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்க
பா.ஜ.க. தலைவர்கள் பொறுப்பை தட்டிக்கழிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர் - ராகுல் காந்தி குற்றச்சாட்டு


இந்தூர், 17 ஜனவரி (ஹி.ச.)

கடந்த மாதம் மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் உள்ள பாகீரத்புரா பகுதியில் பொதுக் கழிப்பறையில் இருந்து வெளியேறிய கழிவுநீர் குடிநீர் குழாய்களில் கலந்ததால் குடிநீர் மாசுபட்டது. இதனால் பலருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

பாகீரத்புராவில் தொடர்ந்து மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாகீரத்புராவில் 2,354 குடும்பங்களை சேர்ந்த 9,416 பேருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதிதாக 20 நோயாளிகள் கண்டறியப்பட்டனர். நோய்த் தொற்று பரவிய பிறகு 398 பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ஒரு பொறியாளர் பணீநீக்கம் செய்யப்பட்ட நிலையில், 2 உயர் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இன்று (ஜனவரி 17) பாகீரத்புராவிற்கு நேரில் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதன் பிறகு செய்தியாளர்களிடம் ராகுல் காந்தி கூறியதாவது,

சுத்தமான குடிநீர் என்பது பொது உரிமை. இந்தூர் ஒரு ஸ்மார்ட் நகரம். ஆனால் சுத்தமான குடிநீர் கூட இல்லை. மக்கள் மிரட்டப்படுகிறார்கள். மக்களுக்கு சுத்தமான தண்ணீரை வழங்குவதும் மாசுபாட்டைக் குறைப்பதும் அரசாங்கத்தின் பொறுப்பு. ஆனால் அரசாங்கம் இந்தப் பொறுப்புகளை நிறைவேற்றவில்லை.

இது இந்தூரை மட்டும் பற்றியது அல்ல. நாடு முழுவதும் உள்ள நகரங்களில் இது நடக்கிறது. அரசாங்கத்தின் அலட்சியத்தால் இந்தூரில் மக்கள் அசுத்தமான தண்ணீரைக் குடித்து இறந்துள்ளனர். இதுபோன்ற சூழ்நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் முழு ஆதரவையும் போதுமான இழப்பீட்டையும் வழங்க வேண்டும்.

இந்தூரில் ஏற்பட்ட குடிநீர் பேரழிவிற்கு அரசாங்கத்தில் உள்ள ஒருவர் பொறுப்பேற்க வேண்டும். மேலும் உயிரிழப்புகளுக்கு அரசாங்கமே பொறுப்பாகும். மக்கள் வேதனையில் இறந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் பா.ஜ.க. தலைவர்கள் பொறுப்பை தட்டிக்கழிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர். நாங்கள் பகீரத்புராவின் மக்களுடன் நிற்கிறோம்.

குற்றவாளிகளைத் தண்டிக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை உறுதி செய்யவும் தொடர்ந்து போராடுவோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Hindusthan Samachar / vidya.b