Enter your Email Address to subscribe to our newsletters

திருத்தணி, 17 ஜனவரி (ஹி.ச.)
முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோவிலில் காணும் பொங்கல் விழாவை முன்னிட்டு அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். காணும் பொங்கலை ஒட்டி மக்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் முன்கூட்டியே போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
காணும் பொங்கல் விடுமுறையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் வேலூர் மற்றும் ஆந்திர மாநிலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள்
மலைக்கோவிலில் குவிந்தனர்.
மாட வீதியைச் சுற்றி பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். 100 ரூபாய் கட்டண வழி மற்றும்
பொது தரிசனம் வழியில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்த பக்தர்கள், முருகனை கண்ட பரவசத்தில் அரோகரா அரோகரா என்ற பக்தி முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டு சென்றனர்.
பக்தர்கள் தடையின்றி சாமி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான
ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதனால் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசலை
தவிர்க்கும் வகையில் ஆட்டோக்கள் மலைபாதையில் செல்ல கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளதால் போக்குவரத்து நெரிசல் இன்றி காணப்படுகிறது.
Hindusthan Samachar / GOKILA arumugam