Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 ஜனவரி (ஹி.ச)
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட கடற்கரைப் பகுதிகளில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது,
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட கடற்கரைப் பகுதிகளில் 14.01.2026 முதல் 16.01.2026 வரை 160.83 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள கடற்கரைப் பகுதிகளை பொதுமக்களின் பொழுதுபோக்கிற்கு உகந்த வகையில் மேம்படுத்திட மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், மெரினா கடற்கரை. பெசன்ட் நகர், திருவான்மியூர், பாலவாக்கம், நீலாங்கரை, அக்கரை, திருவொற்றியூர் கடற்கரை பகுதியில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் இயந்திரங்கள் கொண்டு நாள்தோறும் சுழற்சி முறைகளில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்லக்கூடிய கடற்கரைப் பகுதிகளில் கூடுதலாக தூய்மைப் பணியாளர்கள், இயந்திரங்களைக் கொண்டு 14.01.2026 முதல் தீவிரத் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது
கடற்கரைப் பகுதிகளை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் பராமரிப்பது அனைவரின் பொது பொறுப்பாகும். கடற்கரைகளில் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள், உணவுப் பொருள், எச்சங்கள் உள்ளிட்ட எந்த விதமான கழிவுகளையும் கொட்டுவது சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது.
எனவே. கடற்கரைப் பகுதிகளுக்கு வருகைதரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் தங்களது குப்பைக் கழிவுகளை, அதற்காக வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் மட்டும் போட்டு, மாநகராட்சியின் தூய்மைப் பணிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b