Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 18 ஜனவரி (ஹி.ச.)
திமுக அளித்த தேர்தல் வாக்குறுதி 181-ஐ தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றும் வரை போராட்டக் களத்தை விட்டு நகரப் போவதில்லை என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பகுதிநேர ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
திமுகவின் தேர்தல் வாக்குறுதி 181-ன் படி, 12,000 பகுதிநேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சென்னை டி.பி.ஐ வளாகத்தில் கடந்த 8-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்ற போராட்டம் 11-வது நாளை எட்டியுள்ளது.
இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுத் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டிருந்த பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பகுதிநேர ஆசிரியர் கண்ணன் என்பவர், “எப்போதுதான் முதல்வர் எங்களை பணி நிரந்தரம் செய்வார்?” என்ற கடும் மன உளைச்சலில் விஷம் அருந்தி உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த ஆசிரியர் சமூகத்தையும் உலுக்கியுள்ளது.
ஒரு ஆசிரியர் தன் உயிரையே மாய்த்துக் கொண்ட பின்னரும், தமிழக அரசோ அல்லது முதல்வரோ உயிரிழந்தவர் குடும்பத்துக்கு நிவாரணத் தொகையோ, அவரது மனைவிக்கு அரசு வேலையோ அறிவிக்காதது கடும் கண்டனத்திற்குள்ளாகி உள்ளது.
இதனிடையே, மறைந்த ஆசிரியர் கண்ணனின் மகனுக்கான கல்விச் செலவை ஏற்பதாக இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் மற்றும் அக்கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து ஆகியோர் அறிவித்துள்ளனர். அரசின் கடமையை வேறொரு கட்சி தலைவர் செய்வது பாராட்டத்தக்கது என்றாலும், முதல்வர் இன்னும் மவுனம் காப்பது ஏமாற்றமளிப்பதாக போராட்டக் களத்தில் இருக்கின்ற பகுதிநேர ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
அமைச்சரின் அறிவிப்பு வெறும் கண்துடைப்பு: ரூபாய் 10 ஆயிரம் சம்பளத்தில் பணிபுரிந்த பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் வாக்குறுதி செய்வதாக சொன்ன திமுக ஆட்சியில் 2024-ம் ஆண்டில் சம்பள உயர்வாக ரூபாய் 2,500 வழங்கப்பட்டு தற்போதுவரை 12,500 ரூபாய் சம்பளமே கிடைக்கிறது.
இந்த நிலையில் திமுகவின் 5 ஆண்டு ஆட்சியே முடியப் போகிறது என்பதால் பணி நிரந்தரம் வாக்குறுதியை முதல்வர் நிறைவேற்ற வேண்டும் என பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம் தொடர்ந்து நடக்கிறது.
போராட்டத்தின் தீவிரத்தைக் குறைக்க அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்த ரூ.2,500 சம்பள உயர்வு என்பது வெறும் ‘கண்துடைப்பு நாடகம்’.
பணி நிரந்தரம், காலமுறை சம்பளம் இல்லாமல் அரசு சலுகைகள், பணப் பலன்கள் இல்லாமல் இனி கிடைக்கப் போகும் இந்த வெறும் 15 ஆயிரம் ரூபாய் சம்பளத்தை வைத்து பகுதிநேர ஆசிரியர்கள் அவர்களின் 12 ஆயிரம் குடும்பங்கள் எப்படி அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து அன்றாட வாழ்க்கையை நடத்த முடியும்.
“பகுதிநேர ஆசிரியர்களுக்குத் தேவை சொற்ப சம்பள உயர்வு அல்ல; பணிப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் ‘பணி நிரந்தரம்’ மட்டுமே.
பேச்சுவார்த்தை என்ற பெயரில் ஏமாற்றும் வேலையை அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். 2012 முதல் 2021 வரை எதிர்க்கட்சியாக இருந்தபோது பகுதிநேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்த அதே ஸ்டாலின், இன்று முதல்வரான பின் எங்களை கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்?”
வாக்குறுதிகள் காற்றில் பறக்கின்றனவா?: திமுக தனது தேர்தல் அறிக்கையில் பல்வேறு இடங்களில் பகுதிநேர ஆசிரியர்களைக் குறிப்பிட்டிருந்தது. வாக்குறுதி 181: பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்.
வாக்குறுதி 153: பத்து ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் (தற்போது பகுதிநேர ஆசிரியர்கள் 15 ஆண்டுகள் வேலை செய்கின்றார்கள்).
வாக்குறுதி 377: 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்ச்சியில் தருமபுரி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை பகுதிகளில் அளித்த வாக்குறுதியின்படி, ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் தீர்வு காணப்படும். ஆனால், ஆட்சி முடியும் தருவாயில் உள்ள நிலையிலும், இந்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.
தினமும் பகுதிநேர ஆசிரியர்களை கைது செய்து மண்டபத்தில் அடைப்பதன் மூலம் போராட்டத்தை நசுக்கிவிடலாம் என்று முதல்வர் நினைக்க வேண்டாம். இது கொள்கை முடிவு எடுக்க வேண்டிய நேரம். எந்தவிதமான பேச்சுவார்த்தையும் இன்றி, ஏற்கனவே அளித்த வாக்குறுதியை அரசாணையாக வெளியிட்டாலே போதும்.
பணி நிரந்தரம் என்ற ஒற்றை அறிவிப்பு மட்டுமே 12,000 குடும்பங்களின் கண்ணீரைத் துடைக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b