Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 18 ஜனவரி (ஹி.ச.)
இந்தியாவின் 77-வது குடியரசு தினத்தை சிறப்பிக்கும் வகையில், ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள் குடியரசுத் தலைவர் மாளிகையில் ஏற்பாடு செய்யும் தேநீர் விருந்துக்கான அழைப்பிதழ், வடகிழக்கு மாநிலங்களின் கலை நுணுக்கத்தையும், கைவினைத் திறனையும் பறைசாற்றும் விதமாக வடிவமைக்கப்பட்டு ஜொலிக்கிறது.
அகமதாபாத்தில் உள்ள தேசிய வடிவமைப்பு நிறுவனம், இந்த அழைப்பிதழ் வடிவமைப்பை கலைநயத்துடன் உருவாக்கியுள்ளது.
அஷ்டலட்சுமிகளாக போற்றப்படும் எட்டு மாநிலங்களின் கைவினைப் பொருட்கள், கலாச்சாரம் மற்றும் மரபுகளை ஒன்றிணைத்து, தன்னிறைவு மற்றும் கைவினைஞர்களின் திறமையை உலகிற்கு எடுத்துக்காட்டும் விதமாக இந்த அழைப்பிதழ் தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
அகமதாபாத் என்ஐடி இயக்குனர் அசோக் மொண்டல் அவர்கள் இந்த திட்டத்தின் சிறப்பை விவரிக்கும்போது, குடியரசுத் தலைவர் மாளிகை தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்த வாய்ப்பை வழங்கியிருப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.
அருணாச்சல பிரதேசம், அஸ்ஸாம், மணிப்பூர், மேகாலயா, மிஸோரம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா ஆகிய எட்டு வடகிழக்கு மாநிலங்களின் பாரம்பரிய கைவினைப் பொருட்கள் மற்றும் கலாசார அடையாளங்களை ஒருங்கிணைக்கும் வகையில் இதில் உள்ள படைப்புகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த அழைப்பிதழ் தொகுப்பு தயாரிப்பில் குடியரசுத்தலைவா் மாளிகை, எட்டு மாநிலங்களின் கைவினை கலைஞா்கள் மற்றும் நிபுணர்கள் உதவியுடன் சுமார் 350-க்கும் மேற்பட்டோர் கூட்டு முயற்சியின் வெளிப்பாடாகும்.
ஒவ்வொரு கலைப்படைப்பும், அவற்றின் மூலப்பொருள்களின் பருவகாலக் கிடைக்கும் தன்மை மற்றும் ஒவ்வொரு மாநிலத்தின் தனித்துவமான கைவினை மரபுகளின் பெருமை குறையாதவாறு மிகுந்த கவனம் செலுத்தி சிறப்பாக வடிவமைக்கப்பட்டது.
இந்த தயாரிப்புத் திட்டத்திற்கு அகமதாபாத் என்ஐடி பேராசிரியர்கள் ஆண்ட்ரியா நோரோன்ஹா, டாக்டர் சி.எஸ். சுசாந்த் ஆகியோர் தலைமை தாங்கினர்.
இந்தத் தொகுப்பின் மையப்புள்ளியாக திரிபுராவின் பாரம்பரிய நுட்பங்களைப் பயன்படுத்தி, தறியில் நெய்யப்பட்ட மூங்கில் பாய்களிலிருந்து உருவாக்கப்பட்ட அழைப்பிதழ் பெட்டி திகழ்கிறது.
மூங்கில், வடகிழக்கு இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் கலாச்சார வாழ்வின் உயிர்நாடியாக விளங்குகிறது. சாயமிடப்பட்ட பருத்தி நூல்கள் மற்றும் மெல்லிய மூங்கில் பட்டைகள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
வெளிப்புற உறை, மேகாலயாவின் கையால் செய்யப்பட்ட காகிதம் மற்றும் புகையூட்டப்பட்ட மூங்கில்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
மேலும், உறை மற்றும் பெட்டியில் உள்ள வடிவங்கள், அசாமிய கையெழுத்துப் பிரதி ஓவியங்கள், இப்பகுதியின் வளமான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களில் இருந்து பெறப்பட்ட உத்வேகத்தை பிரதிபலிக்கின்றன.
மூங்கில், கைத்தறித் துணி, தொட்டால் எரிச்சலூட்டும் செடியின் நார், பிரம்பு, களிமண் போன்ற இயற்கை பொருட்கள் இந்தத் தொகுப்பில் மேலோங்கி நிற்கின்றன.
இவை வடகிழக்கு இந்தியாவின் அன்றாட வாழ்க்கை, வாழ்வாதாரங்கள் மற்றும் கலாச்சார மரபுகளுடன் உள்ள ஆழமான தொடர்பை உணர்த்துகின்றன. இப்பகுதி முழுவதும் பெண்களுக்கு வேலைவாய்ப்பின் முக்கிய ஆதாரமாக விளங்கும் கைத்தறிப் பொருட்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
அழைப்பிதழின் உள்ளே, மூங்கில் நெசவு வடிவமானது எட்டு வடகிழக்கு மாநிலங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட கைவினைப் பொருட்களை காட்சிப்படுத்தும் ஒரு சுவர் தொங்கும் சுருளைக் கொண்டுள்ளது.
யுனெஸ்கோவின் 'கலப்பு பாரம்பரியத் தளம்' ஆன கஞ்சன்ஜங்கா மலைத்தொடருடனான ஒரு தொன்மையான தொடர்பை இது அடையாளப்படுத்துகிறது. லெப்சா 'தாரா' நெசவு பாரம்பரியத்தில் உருவாக்கப்பட்ட சிக்கிமின் சிஸ்னு நெசவு மற்றும் எம்பிராய்டரியும் இதில் அடங்கும்.
கூடுதலாக, உலகின் அதிக மழைப்பொழிவு பெறும் பகுதிகளில் ஒன்றான மேகாலயாவின் கிழக்கு காசி மலைகள் மற்றும் மவ்சின்ராமில் இருந்து பெறப்பட்ட பச்சை மூங்கில் நெசவு, அசாமின் கோகோனா மூங்கில் தாடை யாழ், திரிபுராவின் பிரம்பு மற்றும் மூங்கில் பட்டை அலங்காரப் பொருட்கள், நாகாலாந்தின் அரிய ஜவுளி மாதிரி வகைகள், மிசோராமின் சின்னமான கையால் நெய்யப்பட்ட புவான் செய் துணி மற்றும் புதிய கற்காலத்திற்கு முந்தைய காலத்திலிருந்தே வேரூன்றிய கைவினைப் பாரம்பரியமான தாங்குல் நாகா சமூகத்தின் மணிப்பூரி லாங்பி கருப்பு மண்பாண்ட வடிவங்கள் இடம்பெற்றுள்ளன.
ஜனாதிபதியாக திரௌபதி முர்மு பதவியேற்ற பிறகு, ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு மாநிலங்களின் பாரம்பரிய கைவினைத் திறன்களை ஊக்குவிக்கும் வகையில் குடியரசு தின தேநீர் விருந்து அழைப்பிதழ் தொகுப்பு தயாரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் கைவினைஞர்கள், அதிகம் வெளியில் தெரியாத சாதனை படைத்தவர்கள், தீரச்செயல் விருது பெற்றவர்கள் டெல்லிக்கு அழைக்கப்பட்டு குடியரசுத் தலைவரின் விருந்தினராக உபசரிக்கப்படும் நடைமுறை சிறப்பம்சமாகும்.
Hindusthan Samachar / JANAKI RAM