பிரதமர் மோடி மேற்கு வங்கத்தில் ரூ. 830 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார்
ஹூக்ளி, 18 ஜனவரி (ஹி.ச.) மேற்கு வங்கத்தின் ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள சிங்கூரில், 830 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள தொடர் வளர்ச்சித் திட்டங்களைத் பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜனவரி 18) தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய ப
பிரதமர் மோடி மேற்கு வங்கத்தில் ரூ. 830 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார்


ஹூக்ளி, 18 ஜனவரி (ஹி.ச.)

மேற்கு வங்கத்தின் ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள சிங்கூரில், 830 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள தொடர் வளர்ச்சித் திட்டங்களைத் பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜனவரி 18) தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் கூறியதாவது,

கிழக்கு இந்தியாவின் வளர்ச்சி ஒரு வளர்ந்த இந்தியாவின் தொலைநோக்குப் பார்வைக்கு மையமானது. மத்திய அரசு இந்த இலக்கை நோக்கித் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது.

உள்கட்டமைப்பு மற்றும் இணைப்பு வசதிகளை வலுப்படுத்த மேற்கு வங்கம் முழுவதும் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

நாட்டின் முதல் வந்தே பாரத் படுக்கை வசதி ரயில் நேற்று மேற்கு வங்கத்தில் இருந்து தொடங்கப்பட்டது. அந்த மாநிலம் ஏற்கனவே கிட்டத்தட்ட அரை டஜன் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் சேவைகளைப் பெற்றுள்ளது.

இன்று மேலும் மூன்று அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த ரயில்கள் கொல்கத்தாவை டெல்லியில் உள்ள ஆனந்த் விஹார் முனையம், பனாரஸ் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள தாம்பரம் ஆகியவற்றுடன் இணைக்கின்றன.

வங்காளத்தில் துறைமுகம் சார்ந்த மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அடிப்படையிலான வளர்ச்சிக்கு மத்திய அரசு ஊக்கம் அளிக்கும். துறைமுகங்கள் மற்றும் உள்நாட்டு நீர்வழிகள் தொடர்பான திட்டங்கள், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு, மாநிலத்தை உற்பத்தி, வர்த்தகம் மற்றும் தளவாடங்களுக்கான மையமாக மாற்ற மத்திய அரசு உதவும்.

ஷ்யாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்ட கொள்ளளவு விரிவாக்கம் மற்றும் சாகர்மால திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட சாலை இணைப்பு ஆகியவை கடந்த ஆண்டு கொல்கத்தா துறைமுகத்தில் சாதனை அளவிலான சரக்குக் கையாளுதலுக்குப் பங்களித்துள்ளன.

பாலகாரில் விரிவாக்கப்பட்ட துறைமுக நுழைவாயில் அமைப்புக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் ஒரு உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து முனையம் மற்றும் ஒரு சாலை மேம்பாலம் ஆகியவை அடங்கும். சுமார் 900 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள இந்த வசதி, ஆண்டுக்கு 2.7 மில்லியன் டன் சரக்குகளைக் கையாளும் திறன் கொண்ட ஒரு நவீன சரக்குக் கையாளுதல் முனையமாகத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம், கனரக சரக்கு போக்குவரத்தைத் திசைதிருப்புவதன் மூலம் கொல்கத்தாவில் உள்ள நெரிசலைக் குறைக்கும், தளவாட செயல்திறனை மேம்படுத்தும் மற்றும் ஹூக்ளி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கும்.

தளவாடச் செலவுகளையும் பயண நேரத்தையும் குறைக்கும் அதே வேளையில், தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்வதற்காக துறைமுகங்கள், ஆற்று நீர்வழிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் விமான நிலையங்களை ஒருங்கிணைக்க அரசாங்கம் செயல்பட்டு வருகின்றது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஹூக்ளி நதியில் சுற்றுச்சூழலுக்கு உகந்த நகர்ப்புற நதிப் போக்குவரத்து மற்றும் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், கொல்கத்தாவில் அதிநவீன மின்சார கேட்டமரான் படகு சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் .

ரயில்வே துறையில், பிரதமர் மோடி, தர்கேஷ்வர்-பிஷ்ணுபூர் திட்டத்தின் ஒரு பகுதியான ஜெயராம்பதி-பரோகோபிநாத்பூர்-மைனாபூர் புதிய ரயில் பாதையைத் திறந்து வைத்து, பாங்குரா மாவட்டத்திற்கு மேம்பட்ட இணைப்பை வழங்கும் புதிய பயணிகள் சேவையையும் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

இந்தத் திட்டங்கள் விவசாயிகள், மீனவர்கள், சிறு வணிகர்கள் மற்றும் போக்குவரத்துத் துறையினருக்குப் பயனளிக்கும் என்றும், பெருமளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் பிரதமர் கூறினார்.

ஆளுநர் சி. வி. ஆனந்த போஸ், மத்திய அமைச்சர்கள் சர்பானந்த சோனோவால், சாந்தனு தாக்கூர் மற்றும் சுகந்த மஜும்தார் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Hindusthan Samachar / vidya.b