Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 ஜனவரி (ஹி.ச.)
அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் பல்வேறு சங்கங்களின் ஒருங்கிணைந்த போராட்டக் குழுவே 'ஜாக்டோ-ஜியோ' ஆகும். இந்த இயக்கம், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பல்வேறு நியாயமான கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தித் தொடர்ச்சியாகப் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தது.
பல வருடங்களாக ஆளும் அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சிகளிடம் கோரிக்கைகளைச் சமர்ப்பித்து அவற்றை நிறைவேற்றும்படி வற்புறுத்தி வந்தனர். இந்நிலையில், 'ஜாக்டோ-ஜியோ' அமைப்பின் மீது அதிருப்தி கொண்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை உறுப்பினர்களாகக் கொண்டு 'போட்டா-ஜியோ' என்ற ஒரு புதிய அமைப்பு உருவாக்கப்பட்டது.
அண்மையில், இந்த இரண்டு அமைப்புகளும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் முக்கியமான கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரி ஒரு காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்திருந்தனர்.
இதன் விளைவாக, அரசாங்கத்தின் சார்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு, உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, வேலைநிறுத்தப் போராட்ட அறிவிப்பை அவர்கள் திரும்பப் பெற்றனர்.
இந்நிலையில், ஜாக்டோ-ஜியோ, போட்டா-ஜியோ ஆகியவற்றைத் தொடர்ந்து, தற்போது ஆக்டோ-ஜியோ (ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் இயக்கங்களின் நடவடிக்கைக் குழு) என்ற புதிய அமைப்பு ஒன்று உதயமாகியுள்ளது.
இந்த அமைப்பும் ஏற்கனவே அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் முன்வைத்திருந்த பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தற்போது வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளது.
அதன்படி, வரும் பிப்ரவரி மாதம் 3-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாகத் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM