Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 ஜனவரி (ஹி.ச.)
சென்னை பெருநகரில் மக்களுக்கு தேவையான குடிநீர் விநியோகத்திற்காக, சென்னையை அடுத்த செம்பரம்பாக்கம், சோழவரம், தேர்வாய் கண்டிகை, புழல், பூண்டி ஏரிகளில் இருந்தும், கடலுார் மாவட்டம் வீராணம் ஏரியில் இருந்தும், பெருமளவு குடிநீர் பெறப்படுகிறது. இதுதவிர, கடல்நீரில் இருந்தும் குடிநீர் உற்பத்தி செய்யப்படுகிறது. இருப்பினும் குடிநீர் பற்றாக்குறை உள்ளது.
இந்த நிலையில், மாமல்லபுரம் அருகே, கோவளம் உபவடி நிலத்தில் சுமார் 5,161 ஏக்கர் பரப்பளவில் ரூ.342.6 கோடியில் 1.6 டி.எம்.சி. வெள்ள நீரை சேமிக்கும் வகையில், 6-வது நீர்த்தேக்கம் அமைக்கப்படும் என கடந்த பட்ஜெட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.
ஆனால், கோவளத்தை தவிர்த்து மாமல்லபுரம் அடுத்த, நெம்மேலியில் பக்கிங்காம் கால்வாய் (உப வடிநிலத்தில்) புதிய நீர்த்தேக்கம் அமைக்க நீர்வளத்துறை அதிகாரிகள் அதிகாரிகள் முடிவு செய்தனர். அதற்காக தொடர்ந்து ஆய்வும் மேற்கொண்டனர்.
இதன்படி, மாமல்லபுரம் அருகில் நெம்மேலியில் ரூ.342.6 கோடி மதிப்பில், புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்பட உள்ளது. அதற்காக, பகிங்ஹாம் கால்வாய் பகுதியில், 5,161 ஏக்கர் நிலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நெம்மேலியில் ரூ.342.6 கோடியில் புதிய நீர்த்தேக்கத்திற்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜனவரி 19) காலை அடிக்கல் நாட்டி பணிகளை நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். இதற்கான பணிகளையும் அவர் பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
1967 முதல் 2011 வரை திமுக ஆட்சியில் இருந்தபோது 43 அணைகள் கட்டப்பட்டுள்ளன. நீர்நிலைகளை சுற்றி குடியிருப்புகள் அமைவது பழந்தமிழரின் மரபு. சென்னையில் வளர்ந்து வரும் பகுதிகளுக்காக நாம் செய்த பணிகளில் வரலாற்றில் இந்நிகழ்வு இடம்பெறும். சிலர் உண்மை தெரிந்தும் சிலர் உண்மை தெரியாமலும் திமுக ஆட்சியில் அணைகள் கட்டவில்லை என்று பொய் சொல்வர்.
தமிழ்நாட்டில் நீர்நிலைகளை காக்கக் கூடிய திட்டங்களை திமுக ஆட்சி நிறைவேற்றி வருகிறது. சிற்றாறு-1, சிற்றாறு-2, சாஸ்தாக கோவில், கடனா நதி, நம்பியாறு, சண்முகா நதி உள்ளிட்ட அணைகள் கட்டப்பட்டுள்ளன.
கடந்த 5 ஆண்டுகளாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டி குறித்த நேரத்தில் பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டுள்ளது. ரூ.459 கோடியில் 24,833 கி.மீ. தூரத்துக்கு கால்வாய் தூர்வாரும் பணிகள் நடைபெற்றுள்ளன. கால்வாய்கள் தூர்வாரப்பட்டதால் கடைமடை வரை நீர் செல்கிறது. வறட்சி பகுதிகளான திசையன்விளை, சாத்தான்குளத்துக்கு 9 டிஎம்சி நீர் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
பெருகி வரும் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு மற்றுமொரு குடிநீர் தேக்கத்தை திராவிட மாடல் ஆட்சி அமைக்கிறது. சென்னையின் புதிய அடையாளமாக மிக வேகமாக உருவெடுத்துள்ளன சோழிங்கநல்லூர், பள்ளிக்கரணை, மாமல்லபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் 13 லட்சம் பேருக்கு குடிநீர் வழங்க புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
சென்னையை சுற்றி புழல், சோழவரம், பூண்டி உள்ளிட்ட ஏரிகள் உள்ளன. சென்னையை சுற்றி கூடுதலாக மாமல்லன் நீர்த்தேக்கம் அமைய உள்ளது. திமுக ஆட்சியில் நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் க.செல்வம், கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.பாலாஜி, எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, வரலட்சுமி மதுசூதனன், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், நீர்வளத்துறை செயலாளர் ஜெ. ஜெயகாந்தன், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் தி. சினேகா, செங்கல்பட்டு சார் ஆட்சியர் மாலதி ஹெலன், நீர்வளத்துறை முதன்மை தலைமைப் பொறியாளர் கோபாலகிருஷ்ணன், சென்னை மண்டல தலைமைப் பொறியாளர் பொதுப்பணி திலகம், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / vidya.b