Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பதி, 19 ஜனவரி (ஹி.ச.)
சங்கராந்தி விடுமுறையை முன்னிட்டு பொங்கல் கொண்டாட சொந்த ஊருக்கு வந்த இளைஞர்கள் அதிகம் குடிப்பது யார் பந்தயம் போட்டு மது அருந்தியதில் அவர்களில் இரண்டு மென் பொறியாளர்கள் தலா 19 பாட்டில் பீர் குடித்து உயிரிழந்த பரிதாப சம்பவம் ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் பண்டவாரி பள்ளி கிராமத்தில் நடைபெற்றுள்ளது.
பண்டவாரி பள்ளி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் வெளியூர்களில் பல்வேறு வகையான வேலைகள், வியாபாரங்கள் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களில் பலர் சங்கராந்தியை முன்னிட்டு பொங்கல் கொண்டாட சொந்த ஊருக்கு வந்திருக்கின்றனர்.
இந்த நிலையில் ஜாலியாக பொழுதை போக்க முடிவு செய்து அவர்கள் தங்கள் ஊரின் ஒதுக்குப்புறமாக இருக்கும் மலை மீது சென்று பந்தயம் போட்டு மது அருந்தினர்.
அப்போது போட்டி போட்டு பந்தயம் கட்டி அவர்களில் இரண்டு இளைஞர்கள் ஆன மணிகுமார் (35), புஷ்பராஜ் (27) ஆகியோர் தலா 19 பாட்டில் பீர் குடித்ததாக கூறப்படுகிறது.
இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டு மயங்கி சரிந்த இரண்டு பேரையும் நண்பர்கள் பீலேரு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
ஆனால் அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் இரண்டு பேரும் ஏற்கனவே மரணம் அடைந்து விட்டதாக அறிவித்து விட்டனர்.
அவர்களில் மணிகுமார் சென்னையிலும், புஷ்பராஜ் பெங்களூரிலும் மின் பொறியாளர்களாக வேலை செய்து வருகின்றனர்.
மணிகுமாருக்கு மனைவி, ஒரு மகன் உள்ளனர். புஷ்பராஜுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
குடும்ப உறுப்பினர்களின் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் குடித்த மது மது மாதிரிகளை சேகரித்து ஆய்வகத்திற்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam