உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சாதனை படைத்த மருத்துவ குழுவினருக்கு பாராட்டுகள்
மதுரை, 19 ஜனவரி (ஹி.ச.) மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உதவியாளராக பணியாற்றி வருபவர் விக்னேஷ், ஆண்டிபட்டி தாலுகா சக்கம்பட்டியைச் சேர்ந்த இவரது தந்தை நாகராஜன்-க்கு ரத்த குழாய் அடைப்பால் இடது காலில் மூன்று விரல்களை எடுத்
Usilampatti


மதுரை, 19 ஜனவரி (ஹி.ச.)

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உதவியாளராக பணியாற்றி வருபவர் விக்னேஷ், ஆண்டிபட்டி தாலுகா சக்கம்பட்டியைச் சேர்ந்த இவரது தந்தை நாகராஜன்-க்கு ரத்த குழாய் அடைப்பால் இடது காலில் மூன்று விரல்களை எடுத்த தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காகவும், இடது கால்-யை எடுக்க வேண்டும் என மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாக கூறப்படுகிறது.

இந்நிலையில் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மகனான விக்னேஷ் அறுவை சிகிச்சை பிரிவில் உள்ள மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்டு அவர்களும் அனுமதி அளித்த பின் கடந்த 4 ஆம் தேதி உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக நாகராஜன் சேர்க்கப்பட்டார்.

அனைத்து பரிசோதனைகளும் செய்ததுடன், முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பதிவு செய்து கடந்த 9 ஆம் தேதி உசிலம்பட்டி அரசு மருத்துவமனை மருத்துவ குழுவினர் 5 மணி நேர உயர்தர அறுவை சிகிச்சை மூலம் சிகிச்சை அளித்து தொடர் கண்காணிப்பில் வைத்து நாகராஜன் நடக்கும் அளவு குணப்படுத்தி சாதனை படைத்துள்ளனர்.

மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மட்டுமே அளிக்கப்படும் இந்த உயர்தர அறுவை சிகிச்சை முறையை மாவட்ட தலைமை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தியது மதுரை மாவட்டத்திலேயே முதல்முறை என மருத்துவர்கள் தெரிவித்தனர், மேலும் டயாலிசிஸ் அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு அறுவை சிகிச்சைகளும் செய்து கிராமப்புற மக்களின் வாழ்வை மீட்டெடுத்து வருவதாக பெருமிதத்துடன் தெரிவித்தனர்.

சிகிச்சையில் குணமடைந்த நாகராஜனும் கண்ணீர் மல்க மருத்துவ குழுவினருக்கு நன்றி தெரிவித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதோடு, கால் இனி இல்லை என வந்த நபரை நடக்கும் அளவு குணப்படுத்திய அரசு மருத்துவமனை மருத்துவ குழுவினருக்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது.

Hindusthan Samachar / ANANDHAN