Enter your Email Address to subscribe to our newsletters

அகமதாபாத், 02 ஜனவரி (ஹி.ச.)
குஜராத் மாநிலத்தில் 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், சர்வதேச மலர்க் கண்காட்சியின் 14-வது பதிப்பு 'பாரத் ஏக் காதா' என்ற கருப்பொருளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
2026 புத்தாண்டு கொண்டாட்டங்களுடன் இணைந்து, முதலமைச்சர் பூபேந்திர படேல் நேற்று (ஜனவரி 01) சபர்மதி ஆற்றங்கரையில் அகமதாபாத் சர்வதேச மலர்க் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார்.
இந்தத் தொடக்க விழாவில் அகமதாபாத் மேயர் பிரதிபா ஜெயின், அகமதாபாத் சட்டமன்ற உறுப்பினர்களான அமித் தாக்கர், ஜிது படேல் மற்றும் ஹர்ஷத் படேல்; துணை மேயர் ஜதின் படேல்; நிலைக்குழுத் தலைவர் தேவாங் தானி; மாநகராட்சி ஆணையர் பன்சனிதி பாணி; ஆகியோருடன், மாநகராட்சியின் அலுவலகப் பொறுப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள், பெருநிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் பெருந்திரளான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
தொடக்க விழாவுக்குப் பிறகு, முதலமைச்சரும் மற்ற பிரமுகர்களும் மலர்க் கண்காட்சியின் பல்வேறு மண்டலங்களுக்குச் சென்று, மலர்ச் சிற்பங்கள் உட்பட அதன் முக்கிய பகுதிகளை பார்வையிட்டனர்.இந்தியாவின் வளமான மற்றும் பன்முக கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் இந்தக் கண்காட்சி ஜனவரி 22 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த மலர் கண்காட்சியின் புகைப்படங்களை இன்று (ஜனவரி 02) தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பிரதமர் மோடி கூறியுள்ளதாவது,
அகமதாபாத்தின் மலர் கண்காட்சி அனைவரையும் கவரும் என்பது உறுதி! இது படைப்பாற்றல் மற்றும் பொதுமக்களின் பங்கேற்புக்கு ஒரு அற்புதமான எடுத்துக்காட்டு.
இது நகரத்தின் துடிப்பான உணர்வையும் இயற்கையுடனான அதன் தொடர்பையும் அழகாகக் காட்டுகிறது.
இந்த மலர் கண்காட்சியின் பிரம்மாண்டமும் கற்பனையும் ஒவ்வொரு ஆண்டும் எவ்வாறு தொடர்ந்து வளர்ந்து வருகிறது என்பதைப் பார்ப்பதும் ஊக்கமளிக்கிறது.
மலர் கண்காட்சியின் சில வசீகரிக்கும் புகைப்படங்கள் இங்கே…
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b