Enter your Email Address to subscribe to our newsletters

தருமபுரி, 04 ஜனவரி (ஹி.ச.)
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஒகேனக்கல் சுற்றுலா தலம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கலுக்கு வந்து செல்கின்றனர்.
இங்கு இருக்கும் மெயின் அருவி, சினி அருவி உள்ளிட்ட பகுதிகளில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீரில் குளித்து விடுமுறையை கொண்டாட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களிலிருந்து சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.
கர்நாடக மாநிலத்தில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக, கடந்த 2 ஆண்டுக்கு முன்பு அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் முழு கொள்ளளவை எட்டிய போது, அதிகளவில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இதனால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும், நீர்வரத்து அதிகரிப்பால், மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது.
இதையடுத்து, மேட்டூர் அணையின் நீர்த்தேக்கம் ஒகேனக்கல் மெயினருவி வரை இருந்தது. இதனைத் தொடர்ந்து சின்னாறு, கோத்திக்கல் பரிசல் துறையிலிருந்து மணல்திட்டு வரை மட்டுமே பரிசல் இயக்கத்திற்கு அனுமதிக்கப்பட்டிருந்தது.
தற்போது, ஒகேனக்கல் காவிரியில் வரும் நீரின் அளவு விநாடிக்கு 2000 கனஅடியாக உள்ளது. இதன் காரணமாக, ஒகேனக்கலில் நீர்த்தேக்கம் முற்றிலுமாக குறைந்தது. இதனால், 2 ஆண்டுகளுக்கு பின்பு மாமரத்துக்கடவு பரிசல் துறையில் இருந்து, தற்போது மீண்டும் பரிசல்கள் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் சுற்றுலா பயணிகள் பாறைகளுக்கிடையே பரிசலில் செல்லும் போது, புதுமையான அனுபவத்தை பெறுவார்கள். இதனிடையே, மாமரத்துக்கடவு பரிசல் துறை மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
Hindusthan Samachar / vidya.b