Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி,4 ஜனவரி (ஹி.ச.)
ஹைட்ரஜன் எரிபொருள் ரயிலுக்கான இறுதி கட்ட சோதனை ஹரியானா மாநிலம் ஜிந்த் ரயில் நிலையத்தில் நடத்தப்பட உள்ளது.
இது குறித்து ரயில்வே நிர்வாகம் தெரிவித்து இருப்பதாவது:
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் ஹைட்ரஜன் எரிபொருள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்துடனான ரயில்கள் இயக்கப்பட உள்ளது.
இதற்காக ஹரியானா மாநிலம் ஜிந்த் ரயில் நிலையத்தில் மிக பெரிய ஹைட்ரஜன் எரிபொருள் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது.
துறையின் சார்பில் ஹைட்ரஜன் எரிபொருள் ரயிலுக்காக ஏற்கனவே பல்வேறு கட்ட சோதனை நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. தற்போது இறுதிகட்டமாக ஜிந்த் மற்றும் சோனிபட் இடையே உள்ள 90 கி.மீ. தூரத்திற்கு சோதனை நடத்தப்பட உள்ளது.
இந்த வகை எரிபொருள் மூலம் ரயில் சுமார் 150 கி.மீ வேகத்தில் இயக்க முடியும் என ரயில்வே துறை தெரிவித்து உள்ளது.
இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்து பிரதமரின் அலுவகத்தில் இருந்து இறுதி ஒப்புதல் கிடைத்தவுடன் வழக்கமான சேவைகள் துவங்கும்.
இத்தகைய ரயில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்தில் புதுமைக்கான இந்தியாவின் அர்ப்பணிப்பின் அடையாளமாக இருக்கும்.
சென்னையின் ஒருங்கிணைந்த பெட்டித் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட நான்கு ஓட்டுநர் சக்தி பெட்டிகள் மற்றும் 16 பயணிகள் பெட்டிகள் ஏற்கனவே ஷகூர் பஸ்தி நிலையத்தை வந்தடைந்துள்ளன.
இந்த சோதனை ஓட்டம் ஜனவரி 26 முதல் நடைபெறும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM