Enter your Email Address to subscribe to our newsletters

கள்ளக்குறிச்சி, 04 ஜனவரி (ஹி.ச)
சென்னையில் இருந்து சேலம் நோக்கி சென்ற ஆம்னி பேருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் பாதூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதியது. மோதிய வேகத்தில் ஆம்னி பேருந்து சாலையிலேயே கவிழ்ந்தது.
நள்ளிரவு நேரம் என்பதால், பேருந்தில் தூங்கிக் கொண்டிருந்த பயணிகள் திடுக்கிட்டு எழுந்தனர். படுகாயங்களுடன் பயணிகள் அபயக்குரல் எழுப்பிய நிலையில், அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
இந்த கோர விபத்தில் நாமக்கல் மாவட்டம் மோகனூரைச் சேர்ந்த ஜியாவுதீன் (வயது 25) என்ற இளைஞர் உயிரிழந்தார். 10-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்தில் சிக்கிய பேருந்து நடு சாலையில் கிடந்ததால், திருச்சிசென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சாலையின் இருபுறங்களிலும் சுமார் 3 கிலோமீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தொடர்ந்து கிரேன் மூலம் பேருந்து அங்கிருந்து அகற்றப்பட்டது.
இதையடுத்து போக்குவரத்து நெரிசல் சீரானது.
Hindusthan Samachar / vidya.b