Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பத்தூர், 05 ஜனவரி (ஹி.ச.)
தருமபுரி மாவட்டம் மொரப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பூவரசன் (35). லாரி ஓட்டுநராக பணியாற்றி வரும் இவர், அதிகாலை ஜேசிபி இயந்திரத்தை ஏற்றிக்கொண்டு திருப்பத்தூர் வழியாக சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகே சென்றபோது, முன்னாள் சென்று கொண்டிருந்த வாகனத்தை முந்தி செல்ல பூவரசன் முயன்றார்.
இதில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, நிலைத்தடுமாறி தறிகெட்டு ஓடியது.
பின்னர், சாலை நடுவே உள்ள சென்டர் மீடியன் மீது மோதி விபத்துக்குள்ளாகி நின்றது.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஜோலார்பேட்டை போலீசார், லாரியை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, ஜோலார்பேட்டையை அடுத்த வேட்டப்பட்டு பகுதியில் இருந்து மேல்மருவத்தூருக்கு பக்தர்களை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து, எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளான லாரி மீது மோதி அதிவேகமாக மோதியது.
இதில், பேருந்தின் முன்பக்கம் முழுவதுமாக நொறுங்கியது. இந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 10-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் ஓட்டுநருக்கு படுகாயம் ஏற்பட்டது.
இதையடுத்து, காயமடைந்தவர்களை மீட்ட ஜோலார்பேட்டை போலீசார், அவர்களை ஆம்புலன்ஸ் மூலமாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN