உலகம் உங்கள் கையில் என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
சென்னை, 05 ஜனவரி (ஹி.ச) இலவச லேப்டாப் மாணவ மாணவியரின் நவீன வளர்ச்சிக்கும் டிஜிட்டல் முன்னேற்றத்துக்கும் உதவும் வகையில் ''உலகம் உங்கள் கையில்'' என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட உள்ளது.
Laptop


சென்னை, 05 ஜனவரி (ஹி.ச)

இலவச லேப்டாப்

மாணவ மாணவியரின் நவீன வளர்ச்சிக்கும் டிஜிட்டல் முன்னேற்றத்துக்கும் உதவும் வகையில் 'உலகம் உங்கள் கையில்' என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட உள்ளது.

அடுத்த மாத இறுதிக்குள் 10 லட்சம் லேப்டாப்புகள் கல்லூரி மாணவ மாணவியருக்கு வழங்கப்படுகிறது.

கடந்த நிதிநிலை அறிக்கையில் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்க்கு 20 லட்சம் மடிக்கணினிகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அந்த அறிவிப்பின்படி, இத்திட்டம் மாநிலம் முழுவதும் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படுகிறது.

முதல் கட்டமாக 10 லட்சம் மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா முதல்வர் தலைமையிலும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையிலும் இன்று மாலை 3 மணியளவில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மைய வளாகத்தில் நடைபெறுகிறது.

இந் நிகழ்ச்சியில் அரசு பொறியியல், கலை மற்றும் அறிவியல், மருத்துவம், விவசாயம், சட்டம், பலவகை தொழில்நுட்பக் கல்லூரி, தொழில்துறைப் பயிற்சி போன்ற அனைத்துத் துறைகள் சார்ந்த மாணவர்களுக்கும் 10 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்படுகின்றன.

Dell, Acer, HP போன்ற உலகத் தரமான நிறுவனங்களின் மடிக்கணினிகள் வழங்கப்படுகின்றன.

மாணவர்களுக்கு வழங்கப்படும் இந்த மடிக்கணினிகளில் Intel i3 / AMD Ryzen 3 Processor, 8 GB RAM, 256 GB SSD நினைவகம், Windows 11 Home Strategic மற்றும் BOSS Linux OS ஆகிய மென்பொருள்கள் முன்னதாக நிறுவப்பட்டுள்ள நிலையில், நடைமுறையில் உள்ள கல்வி மற்றும் திட்டப் பணிகளுக்காக MS Office 365, மேலும் “அறிவைத் தேடும் இளைய தலைமுறைக்குப் புதிய சாளரம்” என அமையும் செயற்கை நுண்ணறிவு மென்பொருளான Perplexity Pro–வின் ஆறு மாத சந்தாவும் கட்டணமில்லாமல் வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு மாணவருக்கும் உயர்தர மடிக்கணினி பையும் வழங்கப்படுகிறது.

டிஜிட்டல் திறன் மேம்பாடு மூலம் மாணவர்கள் தகவல் தொழில்நுட்பத் (IT) துறை, மென்பொருள் உருவாக்கம் (Software Development), தரவு உள்ளீடு(Data Entry), டிஜிட்டல் சந்தைப்படுத்தல் (Digital Marketing), வரைகலை வடிவமைப்பு (Graphic Design), குறியிடுதல் (Coding), வலை வடிவமைப்பு (Web Designing), செயற்கை நுண்ணறிவு கருவிகள் (AI Tools), சுயாதீன வேலை (Freelancing) போன்ற துறைகளில் “புதிய வாய்ப்புகளைப் பெறும் புதிய தலைமுறை” என்ற அளவில் தகுதியானவர்களாக மாணவர்களை மாற்றிட உதவுகிறது.

Hindusthan Samachar / P YUVARAJ