Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 05 ஜனவரி (ஹி.ச.)
தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்றுள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் 2,000 தொழிலாளர்களுக்கு புதிய இ-ஸ்கூட்டர் வாங்கும் செலவினத்தில் ரூ.20,000/- மானியமாக வழங்கும் புதிய திட்டம் 2025-2026 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்திற்கு 4 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 100 தொழிலாளர்களுக்கு புதிய இ-ஸ்கூட்டர் வாங்க மானியம் வழங்கும் திட்டத்தினை முதலமைச்சர் இன்றையதினம் (ஜனவரி 05) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன், தலைமைச் செயலாளர் முருகானந்தம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை செயலாளர். வீர ராகவ ராவ்,தொழிலாளர் ஆணையர் ராமன்,தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு மற்றும் நல வாரிய செயலாளர் திவ்வியநாதன், தொழிலாளர் கூடுதல் ஆணையர் யாஸ்மின்பேகம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / vidya.b