மோடி பொங்கல் விழாவில் மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு!
திருச்சி, 05 ஜனவரி (ஹி.ச.) இரண்டு நாள் பயணமாக நேற்று (ஜனவரி 04) தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் பிரசார பயணத்தின் நிறைவு விழாவில் பங்கேற்றுப் பேசிய பின்னர் அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்க
மோடி பொங்கல் விழாவில் மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு


திருச்சி, 05 ஜனவரி (ஹி.ச.)

இரண்டு நாள் பயணமாக நேற்று (ஜனவரி 04) தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் பிரசார பயணத்தின் நிறைவு விழாவில் பங்கேற்றுப் பேசிய பின்னர் அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து எஸ்.பி. வேலுமணியுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

தொடர்ந்து இன்று 2-ம் நாளாக திருச்சியில் அமித் ஷா தங்கியுள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

அமித்ஷா, எஸ்.பி. வேலுமணி, தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் உள்ளிட்டோர் இந்த ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

கூட்டணியில் இன்னும் சில கட்சிகளைச் சேர்ப்பது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஓபிஎஸ், டிடிவி தினகரன், பாமக மற்றும் சில கட்சிகளைச் சேர்க்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது.

அதேபோல அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள் வழங்கப்படும் என்பதும் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

இதற்கிடையில் அமித்ஷா இன்று (ஜனவரி 05) திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோவில் மற்றும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், அர்ஜுன் ராம் மேக்வால், முரளிதர் மோஹோல், இணை அமைச்சர் முருகன் ஆகியோரும் உடனிருந்தனர்.

கோவிலுக்கு சென்ற போது, அங்கு திரண்டிருந்த மக்களுடன் அவர் கை குலுக்கினார்.

மத்திய அமைச்சர்களின் வருகையையொட்டி, திருச்சியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அமித்ஷா திருச்சி மன்னார்புரத்தில் நடைபெற்ற மோடி பொங்கல் விழாவில் கலந்து கொண்டார்.

அவருக்கு பரிவட்டம் கட்டி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் 1008 பானைகளில் பெண்கள் பொங்கல் வைத்து மகிழ்ந்தனர்.

பாரம்பரிய உடையில் அமித்ஷா வேட்டி, சட்டை அணிந்து இருந்தார்.

இந்த பொங்கல் விழாவில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இந்த விழாவுக்கு பின்னர் கார் மூலம் திருச்சி விமான நிலையம் சென்று, அங்கிருந்து அமித்ஷா புது டெல்லிக்கு புறப்பட்டுச் செல்கிறார்.

Hindusthan Samachar / vidya.b