Enter your Email Address to subscribe to our newsletters

ராய்ப்பூர், 05 ஜனவரி (ஹி.ச)
இந்தியாவில் நக்சல்களை 2026ம் ஆண்டு மார்ச்சுக்குள் முற்றிலும் ஒழிக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட், ஒடிசா, மத்தியபிரதேசம், தெலுங்கானா, ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ளது.
இதன் காரணமாக நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு படையினரின் அதிரடி நடவடிக்கைகளைத் தொடர்ந்து, மாவோயிஸ்டுகள், நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டோ, சரண் அடைந்தோ வருகின்றனர்.
நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகம் உள்ள சத்தீஸ்கரில் சமீபத்திய மாதங்களில், அதிகளவில் நக்சலைட்டுகள் காவல்துறையிடம் சரணடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், சத்தீஷ்காரின் பிஜாப்பூர் மாவட்டம் கோர்ஷொலி கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் நக்சலைட்டுகள் கண்ணிவெடி பதுக்கி வைத்துள்ளனர். அந்த கிராமத்தை சேர்ந்த 15 வயதான ராம் போட்டம் என்ற சிறுவன் இன்று (ஜனவரி 05) காலை வனப்பகுதிக்கு சென்றுள்ளான்.
அப்போது, நக்சலைட்டுகள் பதுக்கி வைத்த கண்ணிவெடியில் சிறுவன் ராம் கால் வைத்துள்ளான். இதில் கண்ணிவெடி வெடித்ததில் சிறுவன் ராம் படுகாயமடைந்தான்.
இதையடுத்து விரைந்து சென்ற கிராமத்தினர், சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
சிறுவனுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக பாதுகாப்புப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b