Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 05 ஜனவரி (ஹி.ச.)
தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் ஜனவரி 19-ம் தேதி நடைபெற இருந்த ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ திமுக டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு ஜனவரி.26ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திமுக தலைமை வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
பெரியார், அண்ணா, கருணாநிதி வழியில் மகளிர் மேம்பாட்டுக்கென தொடர்ச்சியான திட்டங்களை வகுத்து, 1.31 கோடி மகளிருக்கு ‘மகளிர் உரிமைத் தொகை’, ‘விடியல் கட்டணமில்லா பேருந்துப் பயணம்’, கல்வி கற்கும் மாணவிகளுக்கு ‘புதுமைப் பெண் திட்டம்’, வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பாதுகாப்பான ‘தோழி விடுதி’, இந்தியாவிலேயே அதிக அளவாக 43 சதவீதம் வேலைக்குப் போகும் பெண்களைக் கொண்ட மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்வதற்கான சூழல் என மகளிர் மேம்பாட்டுக்காக தொடர்ச்சியான திட்டங்களை வகுத்து வரும் முதல்வர் ஸ்டாலின் தலைமையில், கடந்த 29.12.2025 அன்று திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில், ‘பார் சிறுத்ததோ, படை பெருத்ததோ” என்று சொல்லத்தக்க வகையில், “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு கறுப்பு சிகப்பு மகளிர் அணி படையின் மாபெரும் எழுச்சியோடு வெற்றிகரமாக நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் ஜனவரி 19-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதற்குப் பதிலாக, ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ திமுக டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு தேதி மாற்றப்பட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றிட, வருகிற ஜனவரி 26-ம் தேதி (26.01.2026 திங்கட்கிழமை மாலை 4.00 மணி அளவில் நடைபெற உள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b