திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்றலாம் ஆனால் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
மதுரை, 06 ஜனவரி (ஹி.ச.) திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றக் கோரி ராம.ரவிக்குமார் உட்பட பலர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், திருப்ப
திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்றலாம் ஆனால் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு


மதுரை, 06 ஜனவரி (ஹி.ச.)

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றக் கோரி ராம.ரவிக்குமார் உட்பட பலர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உத்தர விட்டார். ஆனால், இந்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லை.

இந்நிலையில், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யவும், அதுவரை உத்தரவுக்குத் தடை கோரி தமிழ்நாடு அரசு, மதுரை மாவட்ட நிர்வாகம், அறநிலையத் துறை, சிக்கந்தர் தர்கா நிர்வாகம் உட்பட 20 மேல்முறையீட்டு மனுக்களும், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு எதிராக 6 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.

தமிழக அரசு மற்றும் தர்கா நிர்வாகம் தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை, இரு நீதிபதிகள் அமர்வில் டிசம்பர் 18 ல் முடிந்தது. தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்திருந்தனர்.

இந்த வழக்கில் இன்று (ஜனவரி 06) காலை, 10:30 மணிக்கு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது.

தீர்ப்பில் நீதிபதிகள் கூறியிருப்பதாவது:

கோவிலுக்கு சொந்தமான இடத்தில் தான் தீபத்துாண் உள்ளது. தீபத்துாணில் தீபம் ஏற்றுவதால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்பது நகைப்புக்குரியது. தீபத்துாணில் தீபம் ஏற்றப்பட வேண்டும். சண்டை போடக்கூடாது. தீபம் ஏற்றும் போது பொதுமக்களை அனுமதிக்கக்கூடாது.

திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்துாண் தர்காவுக்கு சொந்தமானது என்பதை ஏற்க முடியாது. அரசு தரப்பில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

இவ்வாறு இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b