Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 7 ஜனவரி (ஹி.ச.)
'வங்கக்கடலில் உருவாகி உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழகத்தில் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில், நாளை முதல் கனமழை துவங்க வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது:
பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் தெற்கு வங்கக்கடலின் மையப்பகுதியில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவியது.
இது நேற்று முன்தினம் மாலை, காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது.
நேற்று காலை நிலவரப்படி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து, அதே பகுதியில் நிலவிய இது, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.
இதன் காரணமாக, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும், நாளை மறுநாள் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதற்காக, 'ஆரஞ்ச் அலெர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, அரியலுார், கடலுார், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் 10, 11ம் தேதிகளிலும், தமிழகத்தில் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை தொடர வாய்ப்புள்ளது.
தமிழகத்தின் தென் மாவட்டங்களை ஒட்டிய கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில், வரும் 10 வரை பலத்த சூறாவளி வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM