Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 08 ஜனவரி (ஹி.ச.)
கடல் ஆமைகள் முட்டையிடும் காலம் தற்போது துவங்கியுள்ளது. ஆமைகள் அதிகம் வந்து முட்டையிடும் இடமாக பெசன்ட் நகர் உள்ளது. இங்கு ஆண்டுதோறும், 100 முதல் 140 ஆமைகள் வந்து, 6,000 முதல் 12,000 வரை முட்டைகள் இட்டுச் சென்றுள்ளன.
இந்தாண்டின் முதன் முறையாக பெசன்ட் நகர், மெரினா உள்ளிட்ட இடங்களில் கடல் ஆமைகள் முட்டையிட்டு சென்றுள்ளன. இந்தாண்டு அதிக எண்ணிக்கையில் ஆமைகள் வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முட்டைகளை நாய், பறவைகளிடம் இருந்து பாதுகாக்க, பெசன்ட் நகர், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், பழவேற்காடு என, கடற்கரையில் நான்கு இடங்களில், ஆமை முட்டைகள் பாதுகாப்பு கூடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
அதற்கு ஏற்ப பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, கண்காணிப்பு ஊழியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர் என, வனத்துறை அதிகாரிகள் கூறினர்.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில்,
கடல் ஆமைகள் இறந்து கரை ஒதுங்குவது அதிகரித்துள்ளன. இது குறித்த பல்வேறு ஆய்வுகள், தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், முதல் முறையாக மெரினா கடற்கரையில் கடல் ஆமைகள் வந்து முட்டையிட்டு சென்றுள்ளன.
கடல் சுற்றுச்சூழல் காரணமாக, வழக்கமான இடத்துக்கு வராமல் வேறு திசைகளில் வந்து முட்டையிட்டு செல்வதால், அந்த முட்டைகளுக்கு நாய், பறவைகளால் பாதிப்பு ஏற்படும்.
இதனால், எண்ணுார் முதல் பழவேற்காடு வரை உள்ள கடற்கரை பகுதிகளை கண்காணிக்க, வனத்துறை மற்றும் தன்னார்வலர்கள் கொண்ட குழு அமைக்க திட்டமிட்டுள்ளது.
இவ்வாறு வனத்துறை அதிகாரிகள் கூறினர்.
Hindusthan Samachar / vidya.b