Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 09 ஜனவரி (ஹி.ச.)
புதுச்சேரியில் அரசு சாலை போக்குவரத்து கழகம் (பிஆர்டிடிசி) சார்பில் 63 அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பேருந்துகள் சென்னை, கடலூர், காரைக்கால் ஆகிய இடங்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன.
புதுச்சேரியை பொறுத்த வரை அரசுப் பேருந்துகளை காட்டிலும், தனியார் பேருந்துகளே அதிகமாக இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், புதுச்சேரியில் காற்று மாசுபடுவதைக் குறைக்கவும், பெட்ரோல், டீசல் பயன்பாட்டைத் தவிர்க்கவும் புதுச்சேரி அரசின் போக்குவரத்து கழகம் சார்பில் தனியார் பங்களிப்புடன் ரூ.23 கோடியில் 25 மின்சார பேருந்துகள் நவம்பர் மாதம் முதல் இயக்கப்படுகின்றன.
இந்த மின்சார பேருந்துகளுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் ஊதிய பிரச்சினை, பி.எப் பிடிக்காத நிர்வாகத்தை கண்டித்து ஏற்கனவே ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் இன்று
(ஜனவரி 09) மீண்டும் அரசு மின்சார பேருந்து ஊழியர்கள் தங்களுக்கு பி.எப், இ.எஸ்.ஐ பணம் பிடித்தம் செய்யாத நிர்வாகத்தை கண்டித்தும், பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கோரியும், 6 மாதத்திற்கு பிறகு தான் பிடித்தம் செய்யப்படும் என நிர்வாகம் கூறியதால் நிர்வாகத்தை கண்டித்து ஊழியர்கள் இன்று காலை முதல் பேருந்துகளை இயக்காமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஓட்டுநர்கள் பேருந்துகளை இயக்காமல் திடீரென வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் மக்கள் அவதி அடைந்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b