Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 09 ஜனவரி (ஹி.ச.)
மக்களை நேரடியாக சந்தித்து அவர்கள் பயன்பெற்ற அரசின் திட்டங்கள், எதிர்கால கனவுகளை கண்டறியும் வகையில் 'உங்க கனவை சொல்லுங்க' திட்டத்தை தமிழகத்தில் ஆளும் திமுக அரசு சார்பில் முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
இதனை விமர்சனம் செய்துள்ள தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழக மக்களின் கனவுப் பட்டியலை நாங்கள் சொல்கிறோம் என கூறியுள்ளார்.
இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் இன்று (ஜனவரி 09) பதிவிட்டிருப்பதாவது,
உங்கள் கனவை சொல்லுங்கள்” என்ற பெயரில் தமிழகத்தில் புதியதொரு திட்டம் ஒன்றை முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்கள் துவக்கி இருக்கிறார்.
நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு மெல்ல தூக்கத்திலிருந்து விழித்திருக்கும் முதல்வருக்குத் தமிழக மக்களின் கனவுப் பட்டியலை நாங்கள் சொல்கிறோம்:
1. சீரான சட்டம் ஒழுங்கு.
2. கள்ளச்சாராயமும் கஞ்சாவும் இல்லாத தமிழகம்.
3. பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பான தமிழகம்.
4. திமுகவின் வெற்று விளம்பரம் இல்லாத தமிழகம்.
5. அரசுத் துறைகளில் ஊழல் இல்லாத தமிழகம்.
6. ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் தன்மானத்துடன் வாழும் தமிழகம்.
7. தூய்மைப் பணியாளர்கள் விவசாயிகள், அங்கன்வாடி ஊழியர்கள் ஆகியோர் கண்ணீர் சிந்தாமல் வாழும் தமிழகம்.
8. அரசின் அநீதிகளை எதிர்த்து கேள்வி கேட்பவர்களை அடக்கும் பாசிசம் இல்லாத தமிழகம்.
9. விசாரணைக் கைதிகள், புலம்பெயர்ந்தோர் உள்ளிட்ட எவரும் கொல்லப்படாத தமிழகம்.
10. கல்விக் கடன் தள்ளுபடி செய்வோம், அரசு ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்வோம், காஸ் சிலிண்டர் விலையைக் குறைப்போம் என்று பல்வேறு வாக்குறுதிகளைக் கொடுத்து தமிழக மக்களை ஏமாற்றாத அரசு.
11. இந்துமத வெறுப்பில்லாத அரசு.
மொத்தத்தில், திமுக இல்லாத தமிழகம் வேண்டும். அதுவே, தமிழக மக்களின் கனவு. தமிழக மக்களின் இந்தக் கனவு வெகு விரைவில் நிறைவேறும்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b