Enter your Email Address to subscribe to our newsletters

செங்கல்பட்டு, 09 ஜனவரி (ஹி.ச.)
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள உலக புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான மாமல்லபுரத்திற்கு இந்தியாவின் பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டு பயணிகள் ஏராளமானோர் சொகுசு பேருந்து, வேன், கார் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வந்து செல்கின்றனர்.
புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாக திகழ்ந்தாலும், இங்கு முறையான பேருந்து நிலையம் இல்லை. இதில், தலசயன பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் தற்காலிக பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது.
இங்கு, 8 பேருந்துகள் மட்டுமே நிறுத்த முடியும். மற்ற பேருந்துகள் சாலையோரத்தில் நிறுத்தப்படுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் எற்பட்டது. இந்த நிலையில், கடந்த 1992ம் ஆண்டு வெளிநாடுகளில் உள்ளது போன்று, ஒரு நவீன பேருந்து நிலையம் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு முடிவெடுத்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் இப்பணி கிடப்பில் போடப்பட்டது.
இந்த நிலையில் ரூ.90.50 கோடி மதிப்பீட்டில் பல்வேறு அம்சங்களுடன், வெளிநாடுகளில் உள்ளது போன்று நவீன பேருந்து நிலையம் கட்டுவதற்கு கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி காணொலி மூலம் முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
இதையடுத்து, கடந்த 2024ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி கட்டுமானப் பணியை தொடங்கப்பட்டது. பின்னர், அங்கு பணிகள் நடந்து வந்த நிலையில், வடகிழக்கு பருவமழையால் பணிகள் சற்று தடைபட்டது. இதனையடுத்து, தற்போது நவீன பேருந்து நிலைய கட்டுமானப் பணி தொடங்கி தீவிரமாக நடந்து வருகிறது. தனியார், கட்டுமான நிறுவன ஊழியர்கள் அங்கேயே கூடாராம் அமைத்து இரவு - பகலாக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து, சிஎம்டிஏ அதிகாரிகள் கூறுகையில்,
கடந்த 1992ம் ஆண்டு மாமல்லபுரத்தில் அதிநவீன பேருந்து நிலையம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், 33 ஆண்டுகளாக எந்த பணிகளும் தொடங்காமல் கிடப்பில் போடப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில், மாமல்லபுரத்தில் நவீன பேருந்து நிலையம் அமைக்க ரூ.90.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரும், ஜூலை மாதத்திற்குள் கட்டுமான பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Hindusthan Samachar / vidya.b