Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 பிப்ரவரி (ஹி.ச.)
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் மருத்துவ அணியின் கூட்டம் இன்று நடைபெற்றது.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன்,
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு வரும் 24-ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் அதிமுக மருத்துவ அணி சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்குவது குறித்து ஆலோசித்தோம்.
2026ம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தல் வாக்குறுதிகளை குறித்து மக்களின் கோரிக்கைகளை பரிசீலித்து வருகிறோம்.
திமுகவின் வாக்குறுதிகளை போல அல்லாமல், மக்களுக்கு எதை செய்ய வேண்டும், எதை செய்ய முடியும் என்பதை மட்டுமே எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார்.
அதனை மக்களிடம் காெண்டுச் சென்று, வரும் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிப் பெற்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி வருவதற்கு அதிமுக மருத்துவ அணியினர் ஆலோசித்துள்ளோம்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாயில் இருந்து வருவது எல்லாம் பொய்யாகவே உள்ளது. அவருக்கு தேர்தல் பயம் வந்துவிட்டது.
5 ஆண்டுகள் மக்களுக்கு எதுவும் செய்யாமல், பொய்யாக 525 வாக்குறுதிக் கொடுத்து ஆட்சிக்கு வந்தார். நீட் தேர்விற்கு எதிராக முதல் கையெழுத்து போட்டு நீட்டை ஒழிப்போம் என மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார்.
நீட்டை ஒழிப்பதற்கான ரகசியம் தெரியும் என உதயநிதி கூறினார். ஆனால், அதனை ஒழிக்காமல் குருப் 2, 2ஏ தேர்வினை நிறுத்தி வைத்துள்ளனர். இது தான் அவர்களது லட்சணம். அதிமுக ஆட்சியில் 600 மினி கிளினிக் சிறப்பாக செயல்பட்டு வந்தது.
திமுக ஆட்சிக்கு வந்த உடன் எந்த திட்டத்திற்கு எல்லாம் அம்மாவின் பெயர் இருக்கிறதோ, அதனை எல்லாம் மூடிவிட்டனர். அதற்கு பதிலாக மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தில், ஒரே பெயரை 3 முறைக்கு மேல் எழுதி பாெய்யான கணக்கை காண்பித்துள்ளனர்.
அதிமுகவின் கொள்கை முடிவே நீட் கூடாது என்பது தான். ஆனால் மத்திய அரசு பெரும்பான்மையாக சட்டமாக்கி உள்ளது. ஆனாலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டை எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தார்.
அதன் பயனாக ஆண்டிற்கு 600 மாணவர்கள் என 5 ஆண்டுகளில் 3 ஆயிரம் மருத்துவ மாணவர்களையும், 11 அரசு மருத்துவக் கல்லூரிகளையும் கொண்டு வந்துள்ளார். சாமானிய மக்களின் வலித் தெரிந்து அதிமுக செயல்படும்.
திமுக தேர்தல் வாக்குறுதியில் அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 2.5 சதவீதம் தருவோம் என கூறியுள்ளனர். அது பற்றி மூச்சு பேச்சு கிடையாது. கடந்த 5 ஆண்டில் திமுக நிறைய காெள்ளை அடித்துள்ளது.
அதிமுகவின் தேர்தல் வாக்குறுதியை மக்கள் நம்புகின்றனர். தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விட சிறப்பாக இருப்பதற்கு திராவிட ஆட்சிதான் காரணம். அதில் அதிக காலம் ஆட்சி செய்தது அதிமுக தான். நிதி ஆயோக் அறிக்கையில் அதிமுக 3 வது இடத்தில் இருந்தது.
திமுக ஆட்சியில் 12 வது இடத்தில் இருக்கிறது. மதுரை மருத்துவக்கல்லூரியில் பல்வேறு வசதிகளையும், ஆரம்ப சுகாதார நிலையங்களையும் அதிகளவில் தரம் உயர்த்தி தந்துள்ளோம். அரசு மருத்துவமனைகளில் சேவையை செம்மைப்படுத்தியது அதிமுக. திமுக ஆட்சியில் சுகாதாரத்துறை இருண்டத்துறையாகத்தான் இருக்கிறது.
கரோனா காலத்தில் உலகம் முழுவதும் பேரழிவு இருந்தாலும், தமிழ்நாட்டில் பிற மாநிலத்தைவிட பாதிப்பு குறைவுத்தான். ரேஷன் கடையில் மாஸ்க் கொடுத்தது, தடுப்பூசி பாேட்டதும் அதிமுக ஆட்சியில் தான். கல்லீரல் அறுவை சிகிச்சைகள் அரசு மருத்துவமனையில் அதிமுக ஆட்சியில் சிறப்பாக செய்யப்பட்டது.
தேர்தல் நேரத்தில் பணம் கொடுத்தால் அதனை மக்கள் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். ஆட்சி செய்த காலத்தில் என்ன செய்தார்கள் என்பதையும், அடிப்படை வசதிகளையும் பார்த்து தான் மக்கள் வாக்களிப்பார்கள் என தெரிவித்தார்.
Hindusthan Samachar / ANANDHAN