Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 பிப்ரவரி (ஹி.ச.)
தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு அகில இந்திய காங்கிரஸ் தலைமை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி தமிழகத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட 74 மாவட்டத் தலைவா்களின் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் டெல்லியில் ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்றது.
சட்டசபை தேர்தலுக்காக, தி.மு.க.,வுடன் தொகுதிப் பங்கீடு பேச்சு நடத்த, கடந்த நவம்பரில், ஐவர் குழுவை காங்கிரஸ் தலைவர் கார்கே அமைத்தார்.
இதைத் தொடா்ந்து, சென்னை முகப்பேரில் நடைபெறும் தமிழ்நாடு காங்கிரஸ் மாவட்டத் தலைவா்கள் கூட்டம் மற்றும் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை நீக்கியதைக் கண்டித்து பிப்ரவரி 17-இல் நடைபெறும் பாதயாத்திரையில் கே.சி.வேணுகோபால் பங்கேற்கவுள்ளாா்.
மாவட்டத் தலைவா்கள் ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளா் கிரிஷ் சோடங்கா், அகில இந்திய காங்கிரஸ் செயலா்கள் சூரஜ் எம்.என். ஹெக்டே, நிவேதித் ஆல்வா உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.
இக்கூட்டத்தில் தோ்தல் ஆயத்தப் பணி, தோ்தல் பிரசாரம், கட்சியின் மேம்பாட்டு பணி உள்ளிட்டவை குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழகத்தில் கூட்டணிக் கட்சிகளுடன் பிப்ரவரி 22-ஆம் தேதிமுதல் தொகுதிப் பங்கீடு பேச்சு தொடங்கும் என திமுக தலைமை அறிவித்துள்ளது.
இதற்கிடையே, சென்னை வரும் கே.சி.வேணுகோபால், முதல்வா் ஸ்டாலினை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளதாக காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / vidya.b