Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 15 பிப்ரவரி (ஹி.ச.)
சாதாரண நெடுஞ்சாலைகளைவிட விரைவுச் சாலைகளுக்கு 25% கூடுதல் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
மேலும் விரைவுச் சாலையின் பெரும் பகுதியில் கட்டுமானப் பணி முடியாமல் இருந்தாலும், அதன் முழு நீளத்துக்கும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இது வாகன ஓட்டிகளுக்கு பெரும் சுமையாக உள்ளது.
இந்நிலையில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தேசிய நெடுஞ்சாலைக் கட்டண (விகிதங்கள் நிர்ணயம் மற்றும் வசூல்) விதிகள், 2008-ல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, விரைவுச் சாலை முழுமையாகத் திறக்கப்படாத பட்சத்தில், கட்டுமானப் பணிகள் முடிந்து செயல்பாட்டில் இருக்கும் தூரத்துக்கு மட்டுமே சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும்.
முடிக்கப்படாத விரைவுச் சாலைகளில், தேசிய நெடுஞ்சாலைகளுக்கு இணையான குறைந்த கட்டணமே வசூலிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கட்டுமானப் பணி முடிந்து செயல்பாட்டில் உள்ள விரைவுச் சாலைப் பகுதிகளைப் பயன்படுத்த வாகன ஓட்டிகளை ஊக்குவிப்பதற்காகவே மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதனால் பழைய நெடுஞ்சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்து விரைவாக நடைபெறுவது உறுதி செய்யப்படும்.
இந்தத் திருத்தப்பட்ட விதிகள் இன்று முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விரைவுச் சாலை முழுமையாகத் திறக்கப்படும் வரை அல்லது அதிகபட்சமாக ஓராண்டு வரை இந்தச் சலுகை அமலில் இருக்கும் என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b