Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 16 பிப்ரவரி (ஹி.ச.)
ஏப்ரல் 3-ஆம் தேதி அனுசரிக்கப்படவுள்ள புனித வெள்ளியன்று தமிழகம் முழுவதும் மதுக்கடைகளை மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு விடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
கிறிஸ்தவர்களின் மிக முக்கிய நம்பிக்கையான இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தை நினைவு கூரும் புனித வெள்ளி அன்று, கிறிஸ்தவர்கள் இரத்ததான முகாம்கள் நடத்துதல், சிலுவைப் பாதை ஊர்வலங்கள் மற்றும் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்குதல் போன்ற பணிகளில் ஈடுபடுகின்றனர். இந்த நாளை ஒரு தியாக நாளாகக் கடைபிடிப்பதால், அன்று மதுக்கடைகளை மூட வேண்டியது அவசியமாகும்.
டெல்லி மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் புனித வெள்ளியன்று ஏற்கனவே மதுக்கடைகள் மூடப்படுகின்றன.
அதேபோல் தமிழகத்திலும் மகாவீர் ஜெயந்தி, மிலாடி நபி, வள்ளலார் நினைவு நாள் போன்ற தினங்களில் மதுக்கடைகள் மூடப்படுகிறது.
அந்தப் பட்டியலில் புனித வெள்ளியையும் சேர்க்க வேண்டும்.
கடந்த ஐந்து ஆண்டுகளாகவே சிறுபான்மையினர் நல ஆணையம் மற்றும் பல்வேறு மதுவிலக்கு இயக்கங்கள் வாயிலாக இந்தத் தொடர் கோரிக்கை தமிழக அரசுக்கு முன்வைக்கப்பட்டு வருகின்றது.
தமிழக அரசு படிப்படியாக மதுக்கடைகளைக் குறைத்தல் மற்றும் மது போதைக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு இல்லங்கள் அமைத்தல் போன்ற முயற்சிகளை மேற்கொண்டு வருவகிறது. மக்களின் சமய கலாச்சார விழாக்களின் மாண்பைக் காக்க அரசு முன்வர வேண்டும்.
என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவினை தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை குரு ஜோசப் ரவிபாலன், தலைமைச் செயலர் சகாய லூரின் மற்றும் மதுவிலக்கு சபை இயக்குனர் ஜெயந்தன் டி கிரேஸ் ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர்.
Hindusthan Samachar / vidya.b