மகா சிவராத்திரியை முன்னிட்டு திருவண்ணாமலை திருக்கோயிலில் பக்தர்கள் இரவு முழுவதும் சாமி தரிசனம்
திருவண்ணாமலை, 16 பிப்ரவரி (ஹி.ச.) திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் அருணாசலேஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரி திருவிழா பிரம்மாண்டமாக அனுசரிக்கப்பட்டது. மகா சிவராத்திரியின் மகிமையை விவரிக்கும் புராணக் கதைகளின்படி, மகாவிஷ்ணுவும், பிரம்மதேவனும் சிவபெரு
மகா சிவராத்திரி - திருவண்ணாமலை திருக்கோயிலில் பக்தர்கள் இரவு முழுவதும் சாமி தரிசனம்


திருவண்ணாமலை, 16 பிப்ரவரி (ஹி.ச.)

திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் அருணாசலேஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரி திருவிழா பிரம்மாண்டமாக அனுசரிக்கப்பட்டது.

மகா சிவராத்திரியின் மகிமையை விவரிக்கும் புராணக் கதைகளின்படி, மகாவிஷ்ணுவும், பிரம்மதேவனும் சிவபெருமானின் ஆரம்பத்தையும், முடிவையும் கண்டுபிடிக்க முடியாத போது, சிவபெருமான் லிங்கோத்பவ மூர்த்தியாக காட்சியளித்தார். அந்த புனித நாளை நினைவு கூறும் வகையில், இந்த ஆலயத்தில் சாமி சன்னதியின் பின்னே லிங்கோத்பவ மூர்த்தியின் திருவுருவம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான மகா சிவராத்திரி திருவிழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவையொட்டி, அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு, சிவனுக்கும், அம்பாளுக்கும் விசேஷ அபிஷேகங்கள் நடத்தப்பட்டன.

மகா சிவராத்திரி திருவிழாவை தரிசிக்க நேற்று அதிகாலை முதலே திரளான பக்தர்கள் கோயிலில் குவிந்தனர். மாலை வேளையில் பக்தர்களின் வருகை மேலும் அதிகரிக்கத் தொடங்கியது. நீண்ட வரிசையில் காத்திருந்து ஆத்மார்த்தமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

குறிப்பாக, மற்ற மாவட்டங்களை சேர்ந்தவர்களைத் தவிர, அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். மட்டுமல்லாது, வெளிநாட்டிலிருந்து வந்திருந்த பக்தர்களும் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

மகா சிவராத்திரியை முன்னிட்டு நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை சிறப்புடன் 4 கால பூஜைகள் நடைபெற்றன. முதல் கால பூஜையை பிரம்மாவும், இரண்டாம் கால பூஜையை மகாவிஷ்ணுவும், மூன்றாம் கால பூஜையை உமையாளும், நான்காம் கால பூஜையை முப்பத்து முக்கோடி தேவர்களும் செய்ததாக வரலாறு கூறுகிறது.

கோயிலுக்கு வந்த பக்தர்கள் எவ்வித இடையூறும் இல்லாமல் சாமி தரிசனம் செய்ய கட்டண தரிசனம் மற்றும் இலவச தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சிவராத்திரியை கொண்டாடும் வகையில், எண்ணற்ற பக்தர்கள் கோயிலின் பின்புறம் அமைந்துள்ள மலையைச் சுற்றி கிரிவலம் சென்றனர். நேற்று பகலில் கிரிவலம் சென்றவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. மாலையில் கிரிவலம் செல்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கத் தொடங்கியது.

விடியும் வரை லட்சக்கணக்கான பக்தர்கள் பக்தி சிரத்தையுடன் கிரிவலம் சென்றனர்.

Hindusthan Samachar / JANAKI RAM