Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை , 17 பிப்ரவரி (ஹி.ச.)
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் என்னும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் இயங்கும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கான ஆண்டு பொதுத் தேர்வுகள் இன்று தொடங்குகின்றன.
இந்த தேர்வுகளில் நாடு முழுவதும் மற்றும் பிற 26 நாடுகளை சேர்ந்த மொத்தம் 45 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்க உள்ளனர். மொத்தம் 204 பாட தலைப்புகளில் தேர்வுகள் நடக்கின்றன. பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியர் இன்று கணக்குப்பாட தேர்வையும், 12ம் வகுப்பு மாணவ, மாணவியர் பயோடெக்னாலஜி, தொழில் முனைவோர், மற்றும் சுருக்கெழுத்து உள்ளிட்ட பாட தேர்வையும் எழுதுகின்றனர்.
முதல் நாள் தேர்வில் 20 லட்சம் பேர் 8074 தேர்வு மையங்களில் எழுதுவார்கள் என்றும் இந்த தேர்வு காலை 10.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணி வரை நடக்கும் என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு பொதுத் தேர்வில் மேற்கண்ட கல்வி வாரியம் மாணவர்களுக்கான தேர்வில் மதிப்பீடுகள் மற்றும் விடைத்தாள் திருத்துவது ஆகியவற்றில் பெரிய மாற்றங்களை செய்துள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வு இரண்டு கட்டமாக நடத்தப்பட உள்ளது.
முதற்கட்ட தேர்வு பிப்ரவரி 17ம் தேதி தொடங்கி மார்ச் 11ம் தேதி வரையும், இரண்டாம்கட்ட தேர்வு மே 5ம் தேதி தொடங்கி 20ம் தேதி வரையும் நடக்கும். 12ம் வகுப்பு தேர்வு இன்று தொடங்கி ஏப்ரல் 10ம் தேதி வரை நடக்கும்.
மேற்கண்ட தேர்வுகளுக்கான அட்டவணைகளை சிபிஎஸ்இ இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b