Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 பிப்ரவரி (ஹி.ச.)
2026 - 2027ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று (17.02.2026) காலை 09:30 மணிக்கு கூடியது.
அப்போது சபாநாயகர் அப்பாவு, “ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள் போற்றி வழங்கும் நெறி” என்ற திருக்குறளை வாசித்தார்.
அதற்கான பொருளாக வருவாய் அளவை அறிந்து அதனை வகுத்து வழங்குவதே பொருளைச் சீராக காத்து வாழும் வழியாகும் எனத் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து இடைக்கால பட்ஜெட்டை, நிதியமைச்சர்தங்கம் தென்னரசு தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
அதில் அவர் பேசியதாவது,
தமிழ்நாட்டின் வளர்ச்சி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் வழிநடத்தப்படுகிறது. நாட்டிற்கே வழிகாட்டும் கடமையினை மிகுந்த பொறுப்புணர்வுடன் செயல்படுத்தி வருகிறோம்.
தமிழ்நாட்டில் வறுமையை ஒழிக்கும் இறுதிப் போரை தொடங்கியுள்ளோம். ஏற்றுமதியை பெருக்கி, பண வீக்கத்தைக் குறைத்து, உயர்ந்த பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு அடைந்துள்ளது.
இந்தியாவின் 2வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாடு இரட்டை இலக்கு பொருளாதார வளர்ச்சியை அடைய பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்திய முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
அயல்நாடுகளில் வாழும் தமிழர்களுக்காக ஜனவரி 11,12ம் தேதி அயலக தமிழர் தினம் கொண்டாடப்படுகிறது. வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கு தமிழ் மொழியை கற்பிக்கும் வகையில் மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. தமிழ் ஆசிரியர்கள், கலைஞர்களை கொண்டு நேரடி வகுப்புகள் நடத்துவதற்கான பணிகளும் பத்து கோடி மதிப்பில் நடைபெற்று வருகின்றனர்
மகளிர் சுய உதவிக்குழுவுக்கு திமுக ஆட்சியில் அதிக நிதி ஒதுக்கப்படுகிறது. உணவு உற்பத்தியில் வரலாறுகாணாத வளர்ச்சிபெற்றுள்ளது.
செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகளில் இளைஞர்கள் வளர திட்டங்கள் தீட்டப்படும். செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட அறிவுசார் பொருளாதாரத்தில் தமிழக இளைஞர்கள் சிறந்து விளங்கிடும் வகையில் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
மாவட்டம் தோறும் தொழில் பூங்காக்கள், மேம்பாலங்கள், பறவைகள் சரணாலயங்கள், பசுமை வழிப்பயணத்திற்கு உரிய கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. திருக்குறளை உலகெங்கும் கொண்டு சேர்க்கும் நோக்குடன் அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழர் பெருமையை பறைசாற்றும் வகையில் பல அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சோழர் அருங்காட்சியம், நவாய் அருங்காட்சியம், நொய்யல் அருங்காட்சியம் என்று மொத்தம் ரூ.285 கோடியில் அருங்காட்சியங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.உலகத் தரத்தில் கீழடி மற்றும் பொருநை அருங்காட்சியம் திறந்து வைக்கப்பட்டு பெரிய வரவேற்றை பெற்றுள்ளன.
முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு உதவித்தொகை, திறன்பயிற்சி என பல்வேறு நலத்திட்டங்களுக்கு இதுவரை 486 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு 10,469 வீடுகள் கட்ட ரூ.639 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 6,010 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவை கட்டப்பட்டு வருகின்றன.
என அவர் உரையாற்றி வருகின்றார்.
Hindusthan Samachar / vidya.b