Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பூர், 18 பிப்ரவரி (ஹி.ச.)
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி வந்த மணிகண்ட ராஜா மீது போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில், மகிளா நீதிமன்றம் மூன்று ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் இருந்த காலத்தில், மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.
அந்த நேரத்தில், ஆசிரியர் மணிகண்ட ராஜா ஒரு மாணவியின் மொபைல் போன் எண்ணிற்கு ஆபாசமாக பேசியதுடன், ஆபாச புகைப்படங்களையும் அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில் தாராபுரம் மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் குற்றச்சாட்டு உறுதியானதைத் தொடர்ந்து, ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இந்த வழக்கு திருப்பூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி கோகிலா, முன்னாள் ஆசிரியர் மணிகண்ட ராஜா குற்றவாளி எனத் தீர்மானித்து, அவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.1.20 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் கூடுதல் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டியிருக்கும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த தீர்ப்பு, சிறார்களின் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளில் நீதிமன்றங்கள் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துவருகின்றன என்பதற்கான எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது.
பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் குறித்து சமூகத்தில் விழிப்புணர்வு அவசியம் என்றும் அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN