Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 பிப்ரவரி (ஹி.ச.)
சென்னையில் திருவொற்றியூர் அருகே மணலி விரைவு சாலையில் அதிகளவில் கன்டெய்னர் லாரிகள் இயக்கப்படுவதால் அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது என்று மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இதனால் சிக்னல் அமைக்க வேண்டும் என்றும் எர்ணாவூர் முதல் சத்தியமூர்த்தி நகர் வரை சர்வீஸ் சாலை அமைக்கவேண்டும் என்றும் சாலையோரம் ஆக்கிரமித்துள்ள கன்டெய்னர் லாரிகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் நீண்டநாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை மணலி விரைவு சாலையில் பைக்கில் சென்ற 2 பேர் மாநகர பேருந்து மோதியதில் காயம் அடைந்தனர். இதுகுறித்து அறிந்ததும் கம்யூனிஸ்ட் கவுன்சிலர் ஜெயராமன் தலைமையில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலையோரம் ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ள கன்டெய்னர் லாரிகளை உடனடியாக அகற்றி சர்வீஸ் சாலையில் சிக்னல் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு நிலவியது.
போக்குவரத்து போலீசார் வந்து போராட்டக்காரர்களை சமாதானம் செய்து அப்புறப்படுத்தினர்.
அப்போது போலீசார், சம்பந்தப்பட்ட துறைக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.
Hindusthan Samachar / vidya.b