Enter your Email Address to subscribe to our newsletters

கலிபோர்னியா, 19 பிப்ரவரி (ஹி.ச.)
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நிகழ்ந்த கோர பனிச்சரிவில், சாகச பனிச்சறுக்கு வீரர்கள் 8 பேர் உடல் நசுங்கி பலியான துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேலும் ஒருவர் என்ன ஆனார் என்று தெரியாததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிளாக்பேர்ட் மவுண்டன் கைட்ஸ் குழுவின் ஏற்பாட்டின் கீழ், லேக் தாஹோவை ஒட்டிய சியரா நெவாடா மலைப்பகுதியில் 15 பேர் பனிச்சறுக்கு விளையாட சென்றனர். எதிர்பாராத விதமாக கடந்த 17ம் தேதி கேஸ்டில் பீக் அருகே பயங்கர புயல் வீசியதால் பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் அனைவரும் சிக்கித் தவித்தனர்.
உடனடியாக மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் 6 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இருந்தும், 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது பெரும் வேதனையை ஏற்படுத்தியது. ஒருவர் மாயமான நிலையில், அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நெவாடா கவுண்டி ஷெரிப் ஷானன் மூன் இந்த விபத்து குறித்து கூறுகையில்,
1981 ஆம் ஆண்டு மவுண்ட் ரெய்னியரில் ஏற்பட்ட பனிச்சரிவில் 11 பேர் உயிரிழந்த துயரமான சம்பவத்திற்கு பிறகு, அமெரிக்காவில் நடந்த மிக கொடூரமான சம்பவங்களில் இதுவும் ஒன்று.
என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 40 ஆண்டுகளில் அமெரிக்காவில் ஏற்பட்ட மிக மோசமான பனிச்சரிவு இது என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / JANAKI RAM