Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 பிப்ரவரி (ஹி.ச.)
தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப் பேரவைத் தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் நாளை (பிப்ரவரி 20) தொடங்கி மார்ச் 2-ம் தேதி வரை வழங்கப்பட உள்ளதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
அவரது அறிவிப்பின்படி, விருப்பமுள்ளவர்கள் தலைமைக் கழகத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு கட்டணமாக பொதுத் தொகுதிக்கு ரூ.25,000, மகளிர் மற்றும் தனித் தொகுதிக்கு ரூ.10,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்த தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டால் அவர்களுக்கான விண்ணப்பக் கட்டணம் திருப்பி தரப்படும். மேலும், விண்ணப்பப் படிவத்தை ரூ.1000 செலுத்தி சென்னையில் உள்ள தலைமைக் கழகத்தில் பெற்று கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இதுதவிர கூட்டணி கட்சிகளுடனான அதிகாரப்பூர்வ தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை பிப்ரவரி 23-ம் தேதி முதல் திமுக தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து திமுக கட்சி நிர்வாகிகள் கூறுகையில்,
திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் மண்டலப் பொறுப்பாளர்கள், மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதன் அடிப்படையில் கூட்டணி கட்சிகளுடனான அதிகாரப்பூர்வ தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை பிப்ரவரி 23-ம் தேதி முதல் தொடங்க முடிவாகியுள்ளது.
இதற்கான பேச்சுவார்த்தைக் குழு டி.ஆர்.பாலு எம்.பி. தலைமையில் அமைக்கப்படவுள்ளது.
திருச்சியில் மார்ச் 8-ம் தேதி நடைபெறும் திமுக மாநாட்டில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், விசிக உட்பட அனைத்து கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் கூட்டாக பங்கேற்க வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்குள் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணிகள் முடிக்கப்படும்.
என்று கூறினர்.
Hindusthan Samachar / vidya.b