Enter your Email Address to subscribe to our newsletters

வேலூர், 19 பிப்ரவரி (ஹி.ச.)
நடிகர் விஜய் தலைமையேற்று நடத்தி வரும் தமிழக வெற்றி கழகத்தின் மக்கள் சந்திப்புக்கூட்டம் வேலூர் மாவட்டம், அகரம்சேரியில் வரும் திங்கள்கிழமை
(பிப்ரவரி 23) நடைபெற உள்ளது.
காவல்துறை கண்காணிப்பாளரிடம் நேரில் மனு அளித்த தவெக மாவட்ட நிர்வாகிகள், ஐந்து சட்டப்பேரவை தொகுதிகளுக்கு உட்பட்டு நடத்தப்படும் இந்த மக்கள் சந்திப்பு கூட்டத்துக்கு ஒரு தொகுதிக்கு 5 ஆயிரம் பேர் வீதம் 25,000 பேர் வரக்கூடும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, கூட்டம் நடத்தப்படும் இடத்தை கடந்த செவ்வாய்க்கிழமை நேரில் பார்வையிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.யு.சிவராமன், கூட்டத்துக்கு வரக்கூடிய உத்தேச மக்கள் எண்ணிக்கை, வாகனங்கள் நிறுத்துமிடம், வாகனங்கள் வந்தும் செல்லக்கூடிய சாலைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், அடிப்படை வசதிகள், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.
இது தொடர்பாக எழுத்துப்பூர்வ விளக்கங்கள் கேட்டும் காவல் துறை சார்பில் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. தவெகவினர் அளிக்கும் விளக்கங்கள் அடிப்படையில் விஜயின் மக்கள் சந்திப்பு கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்படும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் அகரம்சேரியில் உள்ள 33 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் நடைபெறும் கூட்டத்துக்கான பணிகள் தொடங்குவதற்கு முன்னதாக, இன்று
(பிப்ரவரி 19) அதிகாலை பந்தகால் நட்டு பூஜை செய்யப்பட்டது.
இந் நிகழ்வில் தவெகவின் மாநிலப் பொறுப்பாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / vidya.b