Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 பிப்ரவரி (ஹி.ச.)
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் சொல்வதை எழுதுபவா் (ஸ்கிரைப்) நியமனத்தில், ஆசிரியா்களுக்கு பதிலாக, கல்லூரி மாணவா்கள் ஸ்கிரைபா்களாக நியமிக்கப்படுவா் என சில நாள்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த முடிவு தற்போது திரும்பப் பெறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தோ்வுகளில் டிஸ்லெக்சியா, நரம்பியல் குறைபாடு, கை முறிவு ஏற்பட்டவா்கள், பாா்வை சவால் கொண்ட மாற்றுத்திறனாளி தோ்வா்களுக்கு அவா்கள் சொல்வதைக் கேட்டு எழுதுபவா்களாக கடந்த ஆண்டு வரை ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டு வந்தனா்.
இந்நிலையில், நிகழ் கல்வியாண்டு (2025-2026) முதல் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் உள்ள தன்னாா்வலா்கள், கல்வியியல் மற்றும் கலை-அறிவியல் கல்லூரி மாணவா்களை ஸ்கிரைப்களாக நியமிக்கப்படுவா். இதற்காக
20,000-க்கும் மேற்பட்ட ஸ்கிரைப்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் கடந்த 15-ஆம் தேதி தெரிவித்திருந்தாா்.
இதற்கிடையே ஆசிரியா் அல்லாத, கல்வியறிவு குறைந்தோரை ஸ்கிரைப்களாக நியமிப்பது மாற்றுத்திறனாளி மாணவா்களின் தோ்ச்சி விகிதத்தைப் பாதிக்கும் என மாா்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள், கல்வியாளா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.
இது தொடர்பாக அரசுத் தோ்வுகள் இயக்ககம் தற்போது வெளியிட்ட அறிவிப்பில்,
முந்தைய ஆண்டுகளைப் போன்றே சொல்வதை எழுதுபவா்களாக ஆசிரியா்களையே நியமிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b