Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 20 பிப்ரவரி (ஹி.ச.)
திருநெல்வேலி மாநகராட்சி மேயராக செயல்பட்டு வரும் ராமகிருஷ்ணன் (கிட்டு)
பயணித்த அரசு வாகனம் மீது தனியார் பேருந்து மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் மேயர் உட்பட வாகனத்தில் பயணித்த
அனைவரும் உயிர் தப்பினர் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
திருநெல்வேலி டவுன் பகுதியில் உள்ள தனது இல்லத்திலிருந்து நெல்லையப்பர் பகுதியில் சுவாமி தரிசனம் முடித்து மாநகராட்சி மைய அலுவலகத்திற்கு சென்று
கொண்டிருந்தபோது, நயினார் குளம் மார்க்கெட் அருகே உள்ள திருப்பத்தில் பின்னால் வந்த தனியார் பேருந்து மேயர் வாகனத்தின் பின்பகுதியில் மோதியது.
இதனால் வாகனத்தில் பயணித்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
சம்பவம் குறித்து திருநெல்வேலி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார்
வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆரம்ப விசாரணையில், நாங்குநேரி அருகே உள்ள பொன்னாக்குடி கிராமத்தைச் சேர்ந்த
ரவி என்பவர் தனியார் பேருந்தை ஓட்டி வந்ததும், மேயர் வாகனத்தை பின்தொடர்ந்து
வந்தபோது திடீரென பிரேக் பிடிக்காததால் விபத்து ஏற்பட்டதாக ஓட்டுநர்
தெரிவித்துள்ளதாக போலீசார் கூறினர்.
இதுகுறித்து மேயர் ராமகிருஷ்ணன் கூறுகையில்,
கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசு வாகனத்தில் பயணித்து வருகிறேன்.
இதுவரை சிறிய விபத்து கூட ஏற்பட்டதில்லை.
திடீரென பின்புறத்தில் பலத்த சத்தம் கேட்டதால் அதிர்ச்சியடைந்தேன்.
வாகனத்திலிருந்து இறங்கி பார்த்தபோது தனியார் பேருந்து மோதியிருப்பது தெரிய வந்தது.
இந்த சம்பவம் மனதளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றார்.
மேயர் கார் மீது நடந்த இந்த விபத்து தற்செயலாக நிகழ்ந்ததா அல்லது திட்டமிட்டு
ஏற்படுத்தப்பட்டதா என்பது குறித்து காவல்துறையினர் அனைத்து கோணங்களிலும்
விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam