Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 20 பிப்ரவரி (ஹி.ச.)
தூத்துக்குடி விமான நிலையத்தில் திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
இடைக்கால பட்ஜெட்டில் எதிர்காலத் திட்டங்கள் எதுவுமில்லை எனக் கூறி பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தது குறித்த செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.
இதற்கு கனிமொழி எம்பி பதில் அளித்து கூறியதாவது,
பொதுவாக இடைக்கால பட்ஜெட்டில் பெரிய அறிவிப்புகள் இடம்பெறுவதில்லை. ஆனால், இந்த பட்ஜெட்டை அவர் முழுமையாகப் படித்துப் பார்த்தால் இளைஞர்களுக்கும், விளையாட்டுத் துறைக்கும் தேவையான பல முக்கியமான எதிர்காலத் திட்டங்கள் இருப்பதை அறியலாம். எதற்காவது ஒரு காரணத்திற்காக வெளிநடப்பு செய்ய வேண்டும் என்ற நோக்கில் அவர் நடத்தும் அரசியல் நாடகம் சரியானது அல்ல.
பாஜக தனது கூட்டணியைச் சரியாக வைத்துக் கொண்டாலே போதும்; அவர்கள் ஏன் மற்ற கூட்டணிகளைப் பற்றிக் கவலைப்படுகிறார்கள் எனத் தெரியவில்லை. திமுக - காங்கிரஸ் கூட்டணி பல ஆண்டுகளாகப் பலமாக நிலைத்திருக்கக்கூடிய ஒரு கூட்டணி. இதில் எந்தவித மாற்றமும் வருவதற்கு வாய்ப்பே இல்லை.
மாநில உரிமைகளை டெல்லியில் கொண்டு போய் அடகு வைத்தவர்தான் எதிர்க்கட்சித் தலைவர். 'மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி' என்பதே திமுகவின் அடிப்படைக் கொள்கை. இது ஒருவேளை அவருக்குத் தெரியாமல் இருக்கலாம்.
என்று விமர்சித்தார்.
Hindusthan Samachar / vidya.b