செயற்கை நுண்ணறிவு மாநாடு காங்கிரஸ் விவகாரம் - பாஜக அண்ணாமலை கருத்து
சென்னை, 21 பிப்ரவரி (ஹி.ச.) டெல்லி செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் அத்துமீறி நுழைந்து அரைநிர்வாண போராட்டத்தில் ஈடுபட்ட விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக பாஜக தேசியக் குழு உறுப்பினர்
BJP Annamalai


சென்னை, 21 பிப்ரவரி (ஹி.ச.)

டெல்லி செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் அத்துமீறி நுழைந்து அரைநிர்வாண போராட்டத்தில் ஈடுபட்ட விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இது தொடர்பாக பாஜக தேசியக் குழு உறுப்பினர் அண்ணாமலை கருத்து தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில்,

காங்கிரஸ் கட்சி மீண்டும் ஒருமுறை தேசிய அளவில் அவமானத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு உள்ளது.

ஐந்து லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டதுடன், உலகின் 20க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் அல்லது அரசுத் தலைவர்கள், 60 அமைச்சர்கள் மற்றும் 500-க்கும் அதிகமான உலகளாவிய செயற்கை நுண்ணறிவு நிபுணர்கள் பங்கேற்ற முக்கிய சர்வதேச மாநாட்டில், நாட்டின் மதிப்பை குலைக்கும் நோக்கில் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் அத்துமீறி நுழைந்த சம்பவம் நடைபெற்று உள்ளது.

இந்த சம்பவம் நடைபெற்றும் 24 மணி நேரத்திற்கும் மேலாகியுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இதுவரை அந்த நடவடிக்கையை கண்டித்து எந்த கருத்தையும் வெளியிடாதது குறிப்பிடத்தக்கதாக உள்ளது.

செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டின் வெற்றி, காங்கிரஸ் கட்சிக்கு விருப்பமில்லாததாக இருந்தாலும், அந்த நிகழ்வு இந்தியாவின் சுயாட்சி செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியை உலக அரங்கில் வெளிப்படுத்தியதாக அமைந்தது. இதில் இந்தியாவில் உருவாக்கப்பட்ட மூன்று முக்கிய ஏஐ மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

சார்வம் ஏஐ நிறுவனத்தின் பெரிய மொழி மாதிரி, ஞானி ஏஐ நிறுவனத்தின் 12 மொழிகளை ஆதரிக்கும் பல்மொழி குரல் தொழில்நுட்ப மாடல் மற்றும் பாரத் ஜென் உருவாக்கிய 17 பில்லியன் அளவுருக்களை கொண்ட அடிப்படை செயற்கை நுண்ணறிவு மாடல் ஆகியவை இதில் இடம் பெற்றன.

இந்த மாநாட்டின் மூலம் தரவு மையங்கள் மற்றும் அரையடைவு உற்பத்தி வசதிகள் உள்ளிட்ட கட்டமைப்பு துறைகளில் 250 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான முதலீடுகள் உறுதி செய்யப்பட்டதாகவும், மேலும் டீப் டெக் துறையில் 20 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது இந்தியாவின் எதிர்கால வளர்ச்சியில் உலக நாடுகள் கொண்டுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துவதாகக் கூறப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ் இந்தியா உலகளவில் முன்னேறி வருவதை இந்த முதலீடுகள் உறுதிப்படுத்துகின்றன எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

உலக நாடுகள் இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தில் நம்பிக்கை வைத்து முதலீடு செய்து கொண்டிருக்கும் சூழலில், காங்கிரஸ் கட்சி தேசிய நலனை விட அரசியல் நாடகத்தையே முன்னிறுத்தி உள்ளது என்ற குற்றச்சாட்டும் முன் வைக்கப்பட்டு உள்ளது.

இதன் மூலம் நாட்டின் வளர்ச்சி இலக்குகள் மற்றும் உலகளாவிய முன்னேற்றத்தில் இருந்து காங்கிரஸ் கட்சி இன்னும் விலகியே செயல்பட்டு வருவதாக விமர்சனங்கள் எழுந்து உள்ளன என்று பாஜக அண்ணாமலை குறிப்பிட்டு உள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN