Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 பிப்ரவரி (ஹிச)
தில்லி செயற்கை நுண்ணறிவுத் தாக்க மாநாட்டில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் நடத்திய அரைநிர்வாணப் போராட்டம் அநாகரிகம்.
காட்டுமிராண்டித் தனமானது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,
தில்லியில் நடைபெற்று வரும் உலகலாவிய செயற்கை நுண்ணறிவுத் திறன் தாக்க உச்சி மாநாட்டு அரங்கிற்குள் இளைஞர் காங்கிரஸ் அமைப்பைச் சேர்ந்த சிலர் மேலாடை இல்லாமல் அரை நிர்வாணமாகச் சென்று போராட்டம் நடத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது.
இந்தியாவையும், உலகையும் அடுத்த நூற்றாண்டுக்கு அழைத்துச் செல்வது எவ்வாறு? என்பது குறித்து விவாதிப்பதற்காக நடத்தப்படும் மாநாட்டில், நமது கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் பல நூற்றாண்டுகளுக்கு பின்னோக்கி அழைத்துச் செல்வது போன்ற செயலில் ஈடுபட்டதன் மூலம் காங்கிரஸ் கட்சி எங்கு இருக்கிறது என்பதை உலகுக்கு காட்டியிருக்கிறது.
அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்து எதிர்ப்பு தெரிவிக்க காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுக்கும் உரிமை உண்டு. ஆனால், அந்த எதிர்ப்பு நாகரிகமாக முறையில் வெளிப்படுத்தப்பட வேண்டும். உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்களும், பிரான்ஸ் அதிபர் உள்ளிட்ட உலக அரசியல் தலைவர்களும் பங்கேற்ற இந்தியாவுக்கு பெருமை சேர்க்கக் கூடிய ஒரு நிகழ்வில் காங்கிரஸ் கட்சியினர் இவ்வாறு நடந்து கொண்டிருப்பது அநாகரிகமான, காட்டுமிராண்டித் தனமான செயலாகும். அறிவும், முன்னேற வேண்டும் என்ற எண்ணமும் உள்ள எவரும் இப்படி ஒரு செயலை செய்ய மாட்டார்கள்.
உலகின் போற்றத்தக்க நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் தில்லி செயற்கை நுண்ணறிவுத் திறன் தாக்க உச்சி மாநாட்டு அரங்கில் இப்படி ஒரு நாகரீகமற்ற செயலை அரங்கேற்றியதன் மூலம் தங்களுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் அவப்பெயர் தேடித் தந்திருக்கிறார்கள்.
இதற்கு காரணமானவர்கள் மீது காங்கிரஸ் தலைமை நடவடிக்கை எடுப்பதுடன், இதற்காக நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN