மதுரை வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
மதுரை, 21 பிப்ரவரி (ஹி.ச.) மதுரை உத்தங்குடியில் நடைபெறும் திமுக தென் மண்டல பாக முகவர்கள், வாக்குச் சாவடி குழு உறுப்பினர்கள் கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்கவும், தமிழக அரசு சார்பில் நிறைவேற்றப்பட்ட திட்டப் பணிகளைத் தொடங்கிவைக்கவும் தமிழக முத
மதுரை வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு


மதுரை, 21 பிப்ரவரி (ஹி.ச.)

மதுரை உத்தங்குடியில் நடைபெறும் திமுக தென் மண்டல பாக முகவர்கள், வாக்குச் சாவடி குழு உறுப்பினர்கள் கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்கவும், தமிழக அரசு சார்பில் நிறைவேற்றப்பட்ட திட்டப் பணிகளைத் தொடங்கிவைக்கவும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சிறப்பு விமானம் மூலம் இன்று காலை மதுரை வந்தார்.

அங்கு முதல்வர் ஸ்டாலினுக்கு மதுரை மாவட்ட திமுக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் திமுக நிர்வாகிகள், திரளான தொண்டர்கள் கட்சி கொடியுடன் பங்கேற்று முதல்வா் ஸ்டாலினை வரவேற்றனர்.

பின்னா், மதுரை விமான நிலையத்திலிருந்து காரில் புறப்பட்டு, வடபழஞ்சியில் உள்ள எல்காட் தொழில்நுட்பப் பூங்காவுக்கு சென்றார். அங்கு, ‘பின்னாகிள்’ நிறுவனத்தின் திறன் மேம்பாட்டு மைய கட்டடத்தைத் திறந்துவைத்தார்.

பிறகு, அங்கிருந்து தமுக்கம் பகுதிக்கு செல்லும் முதல்வர், தமுக்கம்-நெல்பேட்டை அண்ணா சிலை வரை 1.3 கி.மீ தொலைவுக்கு ரூ. 190.4 கோடியில் கட்டப்பட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உயர்நிலைப் பாலத்தை திறந்துவைக்கிறார். இதையடுத்து, சிவகங்கையில் புதிதாக அமைக்கப்பட்ட மருது சகோதரர்களின் உருவச் சிலைகளை காணொலி வாயிலாக முதல்வர் திறந்துவைக்கிறார்.

இதனைத் தொடர்ந்து, மதுரை ஸ்ரீமீனாட்சி அரசு மகளிர் கல்லூரியில் மேம்படுத்தப்பட்ட கணினி ஆய்வகத்தைத் தொடங்கிவைக்கிறார். பிறகு, அங்கிருந்து வண்டியூர் புறப்படும் முதல்வர், பிற்பகல் 1.05 மணிக்கு சீரமைக்கப்பட்ட வண்டியூர் கண்மாய் பூங்கா, ஆங்குரன் அறிவியல் மையம், பேரூராட்சிகளின் புதிய அலுவலகக் கட்டடம், 867 ஊரகக் குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம் ஆகியவற்றை மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

இதையடுத்து, மாலை 4 மணிக்கு மதுரை உத்தங்குடியில் நடைபெறும் திமுக தென் மண்டல பாக முகவர்கள், வாக்குச் சாவடி குழு உறுப்பினர்கள் கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகிறார்.

Hindusthan Samachar / vidya.b