Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 22 பிப்ரவரி (ஹி.ச.)
பிரபல நடிகையும் ஆந்திர முன்னாள் அமைச்சருமான நடிகை ரோஜா புகழ் பெற்ற திண்டுக்கல் அருகேயுள்ள பாதாள செம்பு முருகன் திருக்கோவிலில் கருங்காலி மாலை வாங்கி அணிந்து சாமி தரிசனம் செய்து 2000 பேருக்கு அன்னதானம் வழங்கினார்.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையும் ஆந்திரா முன்னாள் அமைச்சருமான நடிகை ரோஜா இன்று திண்டுக்கல் மாவட்டம் இராமலிங்கம் பட்டியில் அமைந்துள்ள புகழ்பெற்ற பாதாள செம்பு முருகன் திருக்கோவிலுக்கு வருகை புரிந்தார்.
முன்னதாக பாதாள செம்பு முருகன் வளாகத்தில் அமைந்துள்ள சங்கிலி கருப்பை தரிசனம் செய்துவிட்டு பின்னர் பாதாள செம்பு முருகனுக்கு 8 கருங்காலி மாலை சாற்றி நடிகை ரோஜாவும் கருங்காலி மாலை வாங்கி அணிந்து கொண்டார்.
பாதாள செம்பு முருகன் திருக்கோவிலில் சார்பாக நடிகை ரோஜாவிற்கும், அவரது மகனுக்கும் பரிவட்டம் கட்டி மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
மேலும் நடிகை ரோஜாவின் சார்பாக பாதாள செம்பு முருகன் திருக்கோவிலில் சுமார் 2000 பேருக்கு அவரின் கரங்களினால் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
இதனை பக்தர்கள் மகிழ்ச்சியோடு பெற்றுக் கொண்டனர்.
நடிகை ரோஜா பாதாள செம்பு முருகன் திருக்கோவிலுக்கு திடீரென சாமி தரிசனம் செய்ய வந்த காரணத்தால் பக்தர்களும் ரசிகர்களும் நடிகை ரோஜாவுடன் ஆர்வத்துடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
பாதாள செம்பு முருகன் திருக்கோவிலில் முன்னாள் இந்நாள் ராணுவ வீரர்களுக்கு மரியாதை, மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை, இலவச தரிசனம்,தட்டில் பணம் பெறுவது கிடையாது, உண்டியல் கிடையாது, கார் பார்க்கிங் இலவசம், இலவச கழிப்பறை இவை அனைத்தும் பாதாள செம்பு முருகன் திருக்கோவிலின் சிறப்பு அம்சமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / Durai.J