Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 22 பிப்ரவரி (ஹி.ச.)
தமிழ்நாட்டின் அமைதி நிலை திரும்ப திமுக ஆட்சியை முடிவுகட்ட வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் உள்ள திருப்பூரில் பயங்கரவாதச் சதித்திட்டம் தீட்டிய 8 தீவிரவாதிகளை டெல்லி போலீசார் கைது செய்துள்ளதாக செய்திகள் வருகின்றன.
கொலை, கொள்ளை என்பதையெல்லாம் தாண்டி, தீவிரவாதத் தாக்குதல் எனும் கொடூர உச்சத்திற்கு தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து வைத்திருக்கிறது இன்றைய ஸ்டாலின் மாடல் திமுக அரசு.
ஏற்கனவே 2022-ல் கோவையில் கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்த போது, தமிழ்நாட்டில் தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதை ஒப்புக்கொள்ளாமல், சிலிண்டர் வெடிப்பு என சமாளிக்கவே முயன்றது திமுக அரசு. தொடர்ந்து தீவிரவாதிகள் கைது என்பது தமிழகத்தில் மத்திய அரசின் என்.ஐ.ஏ. போன்ற அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இங்குள்ள மாநில அரசு இதனைத் தடுக்க என்ன செய்தது?.
டெல்லி போலீசார் வந்து கைது செய்யும் வரை திமுக அரசின் ஏ.டி.எஸ் (Anti Terrorism Squad) என்ன செய்துகொண்டு இருந்தது?. இந்த கையாலாகாத திமுக ஆட்சியைத் தொடர விட்டால், 1998 போல மீண்டும் ஒரு கோரச் சம்பவத்திற்கு கூட வழிவகுத்துவிடுமோ என்ற அச்சம் தான் மக்களிடையே இருக்கிறது. எனவே, தமிழ்நாட்டின் அமைதி நிலை திரும்ப, இந்த திமுக ஆட்சியை முடிவுகட்ட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b