குமரகுரு பன்முகக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி 4-வது பட்டமளிப்பு விழா
கோவை, 22 பிப்ரவரி (H.S.) கோவை குமரகுரு பன்முகக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 2024ஆம் ஆண்டு (இளங்கலை மற்றும் முதுகலை) 4வது பட்டமளிப்பு விழா, குமரகுரு வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் ஜெட்லைன் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரும்,
Graduation


கோவை, 22 பிப்ரவரி (H.S.)

கோவை குமரகுரு பன்முகக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 2024ஆம் ஆண்டு (இளங்கலை மற்றும் முதுகலை) 4வது பட்டமளிப்பு விழா, குமரகுரு வளாகத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில் ஜெட்லைன் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரும், ஜெட் சிந்தசிஸ் நிறுவனருமான திரு. ராஜன் ஆர். நவானி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

மொத்தம் 8 இளங்கலை மற்றும் 2 முதுகலைப் பாடப்பிரிவுகளைச் சேர்ந்த 408 மாணவர்கள் பட்டம் பெற்றனர். 2021–24 இளங்கலை மற்றும் 2022–24 முதுகலைப் பட்டதாரிகள் மொத்தம் 27 பல்கலைக்கழக தரவரிசைகளைப் பெற்றதுடன், அதில் 4 தங்கப் பதக்கங்களும் இடம்பெற்றன.

விழாவில் உரையாற்றிய குமரகுரு நிறுவனங்களின் தலைவர் சங்கர் வானவராயர், மாணவர்கள் தைரியம், கருணை, குணநலம் மற்றும் ஆர்வம் ஆகிய நான்கு அடிப்படை மதிப்புகளை தங்கள் வாழ்வின் தூண்களாகக் கொண்டு புதிய இந்தியாவின் உருவாக்கத்தில் பங்கெடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இக்கால மாற்றச் சூழலில் சாதனை செய்யத் தைரியம் கொள்ளவும், தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகள் இல்லாதவர்களையும் முன்னேற்றப் பாதையில் இணைத்துச் செல்லவும் அவர் வலியுறுத்தினார்.

நிறுவனத்தின் 42 ஆண்டுகால பாரம்பரியத்தை நினைவு கூர்ந்த அவர், நிறுவனர் அருட்செல்வர் டாக்டர் என். மகாலிங்கத்தின் பார்வைச் சிந்தனைகளை மேற்கோள் காட்டி, மகாத்மா காந்தி மற்றும் வள்ளலார் சிந்தனைகளால் தூண்டப்பட்ட இந்நிறுவனத்தின் அடிப்படை நோக்கம் இளைஞர் சக்தியின் மூலம் சமூகமும் நாட்டும் முன்னேறுவதாகும் என்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கி ஜெட்லைன் குழுமத்தின் தலைவரும், ஜெட்சின்தெசிஸ் நிறுவனருமான ராஜன் ஆர். நவானி பேருரையாற்றினார். அவர் பேசியதாவது:

இன்றைய இளைஞர்களுக்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மாபெரும் வாய்ப்புகள் உள்ளன.

140 கோடி மக்கள் தொகையைக் கொண்ட ஒரு நாடு, ஜனநாயக முறையில் வளரும் நாடாக இருந்து வளர்ந்த நாடாக மாறுவது மனித வரலாற்றில் இதுவரை நடக்காத ஒன்று.

நமது மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர் இளைஞர்கள். இந்தியாவின் வளர்ச்சிக்குப் பங்களிக்க இதுவே மிகச் சிறந்த தருணம்.

மாணவர்கள் தங்கள் பன்முகக் கல்வியைப் பயன்படுத்தி சமூகத்தில் மாற்றங்களை உருவாக்க வேண்டும். குறிப்பாக, ஆரஞ்சு பொருளாதாரம் எனப்படும் படைப்பாற்றல் பொருளாதாரம் இன்று மிகப்பெரிய துறையாக வளர்ந்து வருகிறது. ஈ-ஸ்போர்ட்ஸ், டிஜிட்டல் பொழுதுபோக்கு போன்றவற்றின் மூலம் இந்திய இளைஞர்கள் உலகளாவிய சிந்தனைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

இதை நீங்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

எனவும் மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் கற்றலுடன் மகிழ்ச்சியுடனும் நிறைவுடனும் தங்கள் பயணத்தை தொடர வேண்டும் என வாழ்த்தினார்.

இந்த விழாவில், குமரகுரு கல்வி நிறுவனங்களின் தாளாளர், இணைத் தாளாளர், பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.

Hindusthan Samachar / ANANDHAN