Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 22 பிப்ரவரி (ஹி.ச.)
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மன்னாடி மங்கலம் கிராமத்தில் பயிர்களில் பூச்சி தாக்கத்தை குறைத்து, இயற்கை முறையில் பாதுகாப்பு அளிக்கும் நோக்கில், 3G கரைசல் (இஞ்சி–பச்சை மிளகாய்–பூண்டு கரைசல்) தயாரிப்பு குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்க நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை சேர்ந்த இறுதியாண்டு மாணவி எம். சருமதி முன்னின்று நடத்தினார்.
நிகழ்ச்சியில் இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் பூண்டு ஆகியவற்றை பயன்படுத்தி 3G கரைசல் எவ்வாறு தயாரிக்க வேண்டும் என்பதையும், அரைக்கும் முறை, வடிகட்டும் முறை, கலந்து தெளிக்கும் அளவு மற்றும் தெளிக்கும் காலம் போன்ற நடைமுறை விபரங்களையும் விளக்கினார்.
மேலும், 3G கரைசல் பயிர்களில் ஏற்படும் சாறு உறிஞ்சும் பூச்சிகள் மற்றும் சில இலை தின்னும் பூச்சிகளை கட்டுப்படுத்த உதவுவதுடன், ரசாயன பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டை குறைத்து, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத பாதுகாப்பு அளிக்கும் என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விவசாயிகள், குறைந்த செலவில் வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய இந்த இயற்கை கரைசல் பயனுள்ளதாக இருப்பதாக தெரிவித்தனர்.
இத்தகைய செயல்விளக்க நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
Hindusthan Samachar / ANANDHAN